புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

உங்கள் உள்ளுறுப்புகள் உருகும் நோய் பற்றி தெரியுமா உங்களுக்கு. என்ன உள்ளுறுப்புகள் உருகுமா? அதென்ன மெழுகா? என்னய்யா கதை விடுறீங்க? அப்படிங்கறீங்களா? இக்கட்டுரையை முதல்ல படியுங்க ப்ளீஸ்.உள்ளுறுப்புகள் உருகுமா? ஆம். உருகும். நமது உள்ளுறுப்புகள் உருகும்
என்பதை யாருமே நம்ப மாட்டார்கள். ஆனால் அது உண்மை. லட்சக்கணக்கான மக்கள் இந்நோயினால் உலகம் முழுவதும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். 

சாதாரணமாக நமக்கு வயிற்று வலி வருகிறது. சில வயிற்றுவலிகள் சாதாரணமானவைதான். பிரச்சினை இல்லை என்று விட்டுவிடலாம். ஆனால் எளிய பரிசோதனைகளுக்கு அகப்படாத வயிற்று வலிகள் மிகவும் ஆபத்தானவைகள். மருந்து சாப்பிட்டும் சரியாகாமல் வெகு நாட்களாக வயிறு வலித்துக் கொண்டே இருந்தால் இந்த உள்ளுறுப்பு உருகும் நோய்க்கு நீங்கள் ஆட்பட்டிருக்கலாம். 

நம் வயிற்றின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கணையம்தான் (Pancreas) இந்நோய்க்கு முக்கிய காரணமாகிறது. இந்த கணையத்தில் ஏற்படுகிற கோளாறு அல்லது வீக்கம் கணைய அழற்சி எனப்படுகிறது (Pancreatitis). கணைய சுரப்பியின் தாறுமாறாக சுரத்தலே இந்த கோளாறுக்கு காரணம். அதன் மூலம் உணவு செரிக்க கணையம் சுரக்கும் என்சைம்களின் அளவு எல்லையைத் தாண்டுவதால் இப்படி கோளாறுகள் ஏற்படுகிறது. 

சாதாரணமாக தொடர்ந்து ஏற்படும் வயிற்றுவலியானது சில நேரம் இந்த கணைய அழற்சிக்கு அறிகுறியாக இருக்கலாம். இது மிகவும் மோசமான ஒரு நோயாகும். ஆனால் நம்மில் சிலர் தொடர்ச்சியான வயிற்றுவலிக்கு மெடிக்கலில் மருந்து வாங்கி சாப்பிட்டு சரியாகிவிடும் என்று கருதிவிடுகிறோம். ஆனால் விளைவுகள் மேலும் மோசமாகிவிடுகின்றன. 

நம்மில் நிறைய பேருக்கு கணையம் என்றால் என்ன? அதன் வேலைகள் என்னென்ன? என்று கூடத் தெரியாமல் இருக்கிறார்கள். இதயம், நுரையீரல் ஆகியவை என்னவென்று சொல்லிவிடுவார்கள். ஆனால் இந்தக் கணையம் என்றால் என்ன என்று கேட்டால் ‘ஙே’ என்று விழிப்பார்கள். 

கணையம் என்றால் என்ன என்று இரத்தினச் சுருக்கமாகப் பார்த்துவிடலாம். மேலே உள்ள படத்தைப் பாருங்கள். வயிற்றின் மத்திய பாகத்தில் அவரைக்காய் போல குறுக்காக இருக்கிறதே அதுதான் கணையம் (Pancreas). 

கணையம் சிறிய உறுப்பாக இருந்தாலும் நம்முடைய உடலில் மிகப் பெரிய வேலையைச் செய்கிறது. மூர்த்தி சிறுசானாலும் கீர்த்தி பெருசு. இது நாம் உண்ணும் உணவைச் செரிக்க உதவும் நொதிப்பொருளை (என்சைம்னாதான் புரியும். இல்லே) சுரக்கிறது. 

உணவுப்பொருட்களை மாவு போல ஆக்கி சத்துக்களை பிரித்தெடுக்க பெரும் உதவி செய்கிறது. திட உணவு இதனால்தான் திரவ உணவாகி, சத்துக்களாக பிரிக்கப்படுகிறது. கொழுப்பு, புரோட்டீன், கார்போஹைட்ரேட்ஸ் ஆகியவை பிரித்து உடலெங்கும் சக்தியூட்டுவதற்காக அனுப்பப்படுகின்றன. வயிற்றில் சுரக்கும் இந்த அமிலத்தை கட்டுப்படுத்தும் மற்றுமொரு திரவத்தையும் இது சுரக்கிறது. 

இந்த என்சைம்கள் சரியாக சுரக்கப்படவில்லை எனில் உண்ணும் உணவு செரிப்பதில் பிரச்சினைகள் ஏற்பட்டு மலச்சிக்கல் உட்பட பல முக்கிய கோளாறுகள் உண்டாகி விடுகின்றன. மலம் மிகவும் கெட்டியாகப் போகும். அல்லது தண்ணீரைப் போல கழியும். இந்நிலை தொடர்ந்தால் பிரச்சினை பெரிதாகும். இச்சுரப்பிகளின் கோளாறுகளினால் உணவானது சரியாக கிரகிக்க முடியாமல் போய்விடும். எடை குறைதல் உண்டாகும். 

கணையத்தில் ஏற்படும் கட்டி அல்லது வீக்கம் அல்லது இந்த சுரப்புக் கோளாறுகள் காரணமாக வயிற்று வலி உண்டாகிறது. நாள்பட்ட வயிற்றுவலியை தொடர்ந்து அலட்சியம் செய்வோமானால் ஒரு கட்டத்தில் கணையமானது உருகத் தொடங்குகிறது. அதாவது உடையத் தொடங்குகிறது. அல்லது அழியத் தொடங்குகிறது. 

பழுதடைந்த கணையம் சுரக்கும் அதிக அளவிலான திரவமானது உடலிலுள்ள மற்ற உறுப்புகளையும் சென்று கரைக்கத் துவங்குகிறது. அதாவது உருக்கத் தொடங்கி விடுகிறது. இறுதியில் மரணம் உண்டாகிறது. 
மது அருந்துபவர்களுக்கு இந்த வாய்ப்பு மிக அதிகமாக உள்ளதாக ஆராய்ச்சிக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆகவே அதிக அளவில் மது அருந்தும் பழக்கமுள்ளவர்கள் சி.டி. ஸ்கேன் போன்ற பெரிய சோதனைகளை உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்து இந்நோய் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். குறிப்பாக மது அருந்தும் பழக்கத்தை உடனடியாக விட்டு விடுங்கள். எதுக்குங்க பொல்லாப்பு?! 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top