புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கோவை: கோவையில் நேற்று காதல் தோல்வியால் ஒரு பயங்கரச் செயலை செய்து விட்டார் ஒரு வாலிபர். காதலித்து விட்டு பின்னர் திருமணம் செய்ய மறுத்த கல்லூரிமாணவியை வீடு புகுந்து சரமாரியாக குத்திக் கொலை செய்த அந்த வாலிபர், அதைத் தடுக்க முயன்ற மாணவியின் தாயாரையும் சரமாரியாக குத்தினார். பின்னர் தன் மீதும், மாணவி
மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து எரித்து மாய்ந்து போனார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த பயங்கரச் செயலால் கோவையே பதறிப் போய் விட்டது.

கேரள மாநிலம் பாலக்காட்டைப் பூர்வீமாகக் கொண்டவர் ராஜீவ் மேனன். தொழிலதிபரான இவர் தனது குடும்பத்தோடு கோவையில் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவியும், ஷீத்தல், ஸ்ருதி மேனன் என்ற இரு மகள்களும் உள்ளனர்.

ஷீத்தல் திருமணமாகி கணவருடன் சிதம்பரத்தில் வசித்து வருகிறார். ஷீத்தல் பல் டாக்டர் ஆவார். ஸ்ருதி கோவையில் முதுநிலை பிசினஸ் படிப்பு படித்து வந்தார்.

ஸ்ருதிக்கும், அஜீம் என்ற 21 வயது வாலிபருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வந்தவர்கள். இதனால் காதல் வந்தது. ஆனால் திடீரென தனது காதலை கைவிட்டுள்ளார் ஸ்ருதி. அஜீமை பார்க்கக் கூட மறுக்க ஆரம்பித்தார். திடீரென தனது காதலை ஸ்ருதி நிராகரித்ததால் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தார் அஜீம். இதுகுறித்து ஸ்ருதியுடன் கேட்டபோது மதப் பிரச்சினை வரும் என்பதால் மறுப்பதாக கூறியுள்ளார் ஸ்ருதி.

ஆனால் காதலை ஸ்ருதி நிராகரித்ததால் ஏமாற்றமடைந்த அஜீம் நேற்று மாலை ஸ்ருதி வீட்டுக்குத் தனது காரில் வந்தார். அவரை என்ன என்று லதா கேட்டபோது, பாடம் தொடர்பாக ஸ்ருதியைப் பார்க்க வந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து லதா வீட்டுக்குள் அனுமதித்தார்.

பிறகு ஸ்ருதி அறைக்குப் போன அஜீம், அங்கு காதல் பிரச்சினையைக் கிளப்பியுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. அப்போது கோபத்தின் உச்சிக்குப் போன அஜீம், கையோடு கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து ஸ்ருதியை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த ஸ்ருதி சம்பவ இடத்திலேயே பிணமானார்.

மகள் சத்தம் கேட்டு ஓடி வந்தார் லதா. அவரைப் பார்த்த அஜீம், கோபாவேசத்துடன் அவரையும் சரமாரியாக குத்தினார். அவரிடமிருந்து தப்பிக்க லதா வீட்டு வாசலுக்கு ஓடி வந்தார். ஆனால் விடாமல் குத்தினார் அஜீம். இதில் லதா நிலை குலைந்து கீழே விழுந்தார்.

பின்னர் உள்ளே போன அஜீம், வெறி தணியாமல் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து ஸ்ருதி மீது ஊற்றினார், தன் மீதும் ஊற்றி தீவைத்துக் கொண்டார். தீயுடன் ஸ்ருதி மீது விழுந்து கட்டிப் பிடித்துக் கொண்டார். இதில் சிறிது நேரத்தில் துடிதுடித்து உயிரிழந்தார் அஜீம்.

அஜீமும், ஸ்ருதியும் கரிக்கட்டை போலாகி வி்ட்டார்கள். சம்பவம் நடந்தபோது வீட்டில் ராஜீவ் மேனனின் தந்தை இன்னொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரால் வேகமாக வர முடியவில்லை. தட்டுத் தடுமாறி அவர் வந்து பார்த்தபோது பேத்தி கரிக்கட்டை போல பிணமாகக் கிடப்பதையும், மருமகள் வீட்டு வாசலில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததையும் பார்த்து பதறிப் போனார். வெளியில் வந்து பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவரை குரல் கொடுத்துக் கூப்பிட்டார். அவர்வந்து பார்த்து அதிர்ந்து போய் போலீஸுக்குப் போன் செய்தார்.

போலீஸார் விரைந்து வந்து லதாவை முதலில் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு 9 இடங்களில் கத்திக்குத்து விழுந்துள்ளது. கரிக்கட்டை போலக் கிடந்த ஸ்ருதி, அஜீம் உடல்களையும் அப்புறப்படுத்தினர். இருவரது உடல்களும் பிரிக்க முடியாத அளவுக்கு கருகி, ஒட்டிப் போய்க் கிடந்தது.

மாலையில் நடந்த இந்த பயங்கரச் சம்பவத்தால் கோவை நகரமே பரபரப்பாகி விட்டது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top