புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சமூகத்தில் ஏற்படும் சில மாற்றங்கள் புரட்சிகளாகவும் முன்மாதிரிகளாகவும் மாறி விடுகின்றன. அப்படியானதொரு புதுமையான சமுதாய மாற்றத்தையும் சமூகவியல் பார்வையையும் ஏற்படுத்தியுள்ளது
யாழ்ப்பாணத்தில் பெண்கள் ஆட்டோ ஓட்டும் சுயதொழில் முயற்சி.
பாரதியார் கண்ட புதுமைப் பெண்ணின் வளர்ச்சி காலத்திற்குக் காலம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வருவதை காண முடிகின்றது.

1990 களில் நாட்டில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தின்போது ஆணுக்கு நிகராகப் பெண்கள் செயற்படத் தொடக்கியதும் தன் பார்வையை மாற்றிக்கொள்ள தொடங்கியது.

அவ்வாறே யுத்தத்திற்குப் பின்னரான இக்காலகட்டத்தில் பெண்கள் ஆட்டோ ஓட்டும் சுயதொழில் முயற்சியிலும் இறங்கியுள்ளார்கள்.

பெண்கள் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் பெண்கள் ஆட்டோ ஓட்டும் தொழிலைச் செய்து சுயமாக வாழ்க்கையில் முன்னேறிக்கொள்ளும் வழிவகையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

கணவனால் கைவிடப்பட்ட குடும்பப் பெண்கள், மிக வறுமையால் வாடும் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், தனித்து வாழும் பெண்கள் போன்றவர்களுள் 15 பேரைத் தெரிவு செய்து இப்புதிய தொழில் முயற்சியை வழங்கியுள்ளனர்.

இவர்களுக்கு இவ் உதவி கிடைப்பதற்கு வழிகாட்டியாக நின்று செயற்பட்ட யாழ். பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தரும் மாவட்ட இணைப்பாளருமான செல்வி. உதயனி தெரிவிக்கையில்,


யாழ். மாவட்டத்தில் பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட குடும்பங்களும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களும், குடும்ப வறுமையால் தமது தேவைகளையே நிறைவேற்றிக் கொள்ளமுடியாமல் பரிதவிக்கும் பெண்களும் நிறையவே உள்ளனர்.

இப்படியானவர்கள் எமது பிரதேச செயலகங்களை அணுகி தமது வாழ்வை மேம்படுத்துவதற்கேற்ப ஏதாவது உதவிகளைப் பெற்றுத்தாருங்கள் எனக்கேட்டார்கள்.

நாம் இவர்களை சந்தித்துப் பேசும்போது உங்களுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்ய வேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டபோது.

நாங்கள் சுயமாக நின்று உழைக்கக் கூடிய ஒரு வேலைத்திட்டத்தை உருவாக்கித் தாருங்கள் என்று கூறினார்கள்.

அப்போது நாம் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்ய விருப்பமா என்று கேட்டோம். ஆரம்பத்தில் பலர் அதற்குத் தயக்கம் காட்டினார்கள். இறுதியாக 15 பேர் அதற்கு சம்மதம் தெரிவித்தார்கள்.

தெரிந்தெடுக்கப்பட்ட 15 பேருக்கும் பெண்கள் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் உதவியுடன் 6 மாதப் பயிற்சிகளை வழங்கினோம்.

அத்துடன் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான பயிற்சியையும் பெறுவதற்கு ஒழுங்கு செய்து கொடுத்தோம். 10 பெண்கள் முழுமையான பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டார்கள்.

அதன் பின்னர் அந் நிறுவனத்தினால் கடனடிப்படையில் இவர்களுக்கு ஆட்டோ வழங்கப்பட்டது. இன்று வரை அவர்கள் அனைவருமே ஆட்டோ மூலம் தொழில்செய்து தமது குடும்பத்தையும் பிள்ளைகளின் படிப்புச் செலவையும் பார்த்து வருகிறார்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top