புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


என் வயது 83. பத்து பிள்ளைகளின் தாய், நான் ஒரு நர்சாக பணியில் இருந்@தன். என் குழந்தைகளின் நலனுக்காக, 12 வருட சர்வீஸ் வேலையை விட்டுவிட்டேன். 22 பேரன் பேத்திகள் உள்ளனர். கொள்ளுப் பேத்தி, பிளஸ் 2 பாஸ் செய்து விட்டாள்.


பெண்ணாய் பிறப்பது, எவ்வளவு கேவலம் என்பதை இந்த தள்ளாத வயதில் உணர்கிறேன். தற்கொலை செய்தால், அது என் மகளை பாதிக்கும். ஏனெனில், நான், என் மகள் வீட்டில் தங்கி உள்ளேன். ஆறு மாதம் முன், ஒரு மதியம் என் மருமகன், திடீரென வேலையிலிருந்து வந்தார்… “மாமி உள்ளே வாங்க…’ என்றான். நான் ஒன்றும் சொல்லாமல் வெளியே உட்கார்ந்து இருந்தேன். “என்ன? உன் மகளும் படுக்க வரமாட்டேன் என்கிறாள், நீயும் வரமாட்டேன் என்கிறாய். 500 ரூபாய் தருகிறேன் வா…’ என்றான். நான் வெளியே போய் விட்டேன்.

இந்த விஷயத்தை மெல்லவும் முடியவில்லை; முழுங்கவும் முடியவில்லை. என் கணவர் இறந்து, 15 வருடங்கள் ஆகின்றன. 80 வயது வரை உழைத்தேன். மற்ற குழந்தைகள் வீட்டில் வசதி இல்லை. அதாவது, படுக்க கூட இடமில்லை.

மகள் ஆசிரியை, காலை 8:00 மணிக்கு போனால், திரும்பி வர மாலை 4:00 மணியாகும். என் மகளுக்கு, இரு மகன்கள். பெரியவன் கல்லூரியில் மூன்றாம் வருடம் படிக்கிறான். சின்னவன் பிளஸ் 1 படிக்கிறான்.
மருமகன் அரசு ஊழியன். வீடு பெரிய வீடு. இருமுறை முதியோர் இல்லம் போய் வந்தேன். நான் நாற்பது வருடமாக ஆஸ்துமா நோயால் கஷ்டப்படுகிறேன். அதனால், முதியோர் இல்லத்திலும் என்னால் இருக்க முடியவில்லை. தினம் தினம் செத்துப் பிழைக்கிறேன். இந்த இக்கட்டிலிருந்து வெளிவர, உங்களுடைய நல்ல யோசனையை தயவு செய்து விரைவில் வெளியிடும்படி, கேட்கிறேன் மகளே!
இப்படிக்கு,
அம்மா.

பதில்

அன்புள்ள அம்மாவிற்கு:
சில சமூகங்களில் முதியவர்களை, “ஞானத்துறவி’ என போற்றுவர். வயோதிகம் என்பது ஒரு உயிரியல் யதார்த்தம். முதுமை, மனிதரின் கட்டுப்பாட்டை மீறி, மெதுமெதுவாக மனிதரை ஆக்கிரமிக்கும். முகம், கைகால்களில் சுருக்கங்கள் தோன்றுதல், நரைபூத்தல், முடி உதிர்தல், ரத்த ஓட்டத்தில் மந்தம், நோய் எதிர்ப்பு சக்தியில் குறைபாடு, தொண்டையில் மாற்றம் ஏற்பட்டு, குரல் கிழக்குரலாதல், காது கேளாமை, கண்பார்வை குறைவு, ஞாபகத்திறனில் தேய்மானம், எரிச்சலான மனநிலை, உடலுறவில் ஈடுபாடு அற்றுப்போதல், எலும்பு நோய்கள் பாதிப்பு போன்றவை முதுமையின் அடையாளங்கள்.

இளவயதில், நிறைய சாதித்திருந்தால், முதுமையில் பெருமித உணர்வு பூக்கும். இளவயதில் நிறைய தோல்விகளை சந்தித்திருந்தால், முதுமையில் வெறுமையும், ஆற்றாமையும் நிலவும். முதியவர்களில் இருவகை உண்டு. இளமையான முதியவர்கள், முதுமையான முதியவர்கள். இளமையான முதியவர்கள் தம் வேலைகளை தாமே செய்வர்.

முதுமையான முதியவர்களுக்கு, எழுந்து நிற்கவே யாராவது உதவ வேண்டும். அம்மா… நீங்கள் ஒரு இளமையான முதியப்பெண். எண்பது வயதுவரை குடும்பத்துக்காக உழைத்திருக்கிறீர்கள்.

குடும்ப நலனுக்காக செவிலியர் பணியை, துறந்திருக்கிறீர்கள். நீங்கள் பத்து பிள்ளைகளின் தாய். 22 பேரன் பேத்திகளின் பாட்டி நீங்கள். பிளஸ் 2 பாஸ் செய்த கொள்ளுப்பேத்தியும் உங்களுக்கு உண்டு. இத்தனை அருமை பெருமைகளை கொண்ட, 83 வயது வயோதிகப் பெண்மணியான உங்கள் மீது, உங்களது சொந்த மருமகனே, பாலியல் ரீதியான வன்முறைப் பேச்சை கொட்டி கவிழ்த்திருக்கிறான். ஒரு மூத்த குடிமகளுக்கு நேர்ந்த இந்த அவமானம் ஒரு தேசிய அவமானம்.

முதியோர் ஒரு நாட்டின் அனுபவக்கிடங்கு என்று சொல்வதுண்டு. வீட்டில் ஒளிவீசும் ஒரு நாகரத்தினம். ஒருநாடு சுபிட்சமாக இருக்கிறதா, இல்லையா என்பதை அந்நாட்டின் முதியோர் எண்ணிக்கையை வைத்து கணித்து விடலாம். முதியோர் எண்ணிக்கை கூட கூட நாட்டின் சுகாதார மருத்துவ வசதிகள் எத்தனை தூரம் மேம்பட்டிருக்கின்றன என்பதை உணரலாம். உங்களுக்கு பத்து பிள்ளைகள். மற்ற பிள்ளைகள் வீட்டில் தங்குவதற்கு இடமில்லை.

அதனால், மகள் வீட்டில் தங்கியிருப்பதாக கூறியுள்ளீர். இது நொண்டி சமாதானம். மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பர். மற்ற பிள்ளைகள் தங்கள் வீடுகளில் உங்களை தங்க வைக்க விரும்ப வில்லை. இரண்டு தடவை முதியோர் இல்லத்திற்கு போய், தங்க விருப்பமில்லாமல் திரும்பி, மகள் வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள். நாற்பதாண்டு காலம் ஆஸ்துமாவினால் அவதிப்பட்டிருக்கிறீர்கள்.

இனி, நீங்கள் என்ன செய்யவேண்டும் தெரியுமா அம்மா?
மருமகன் இழிவாய் பேசினால், மவுனமாக மறுகி நிற்காதீர்கள். வார்த்தையால் திருப்பி அடியுங்கள். வாரம் ஒரு மகன் அல்லது மகள் வீட்டில் தங்குங்கள்.

ஆஸ்துமாவுக்கு தகுந்த சிகிச்சை பெற, நல்ல மருத்துவரிடம் அழைத்துபோக சொல்லுங்கள். மாத செலவுக்கு, ஒரு பிள்ளைக்கு, 50 ரூபாய் வீதம் பத்து பிள்ளைகளை, 500 ரூபாய் தரச்சொல்லுங்கள். உங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உங்கள் பிள்ளைகள் செய்து கொடுக்க மறுத்தால், பிள்ளைகளின் மீது காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள். இலவச சட்ட ஆலோசனை மையம் மூலம் பராமரிப்பு செலவை வழங்கச் சொல்லி, நீதிமன்றத்தில் வழக்கு பதியுங்கள்.

நீங்கள் எடுக்கும் நடவடிக்கை உங்களுக்காக மட்டுமல்ல… உங்களை போன்ற ஆயிரக்கணக்கான வயோதிகப் பெண்மணிகளின் நலனுக்காக. உங்களின் வழியாக சமுதாயத்தில் பெரிய அளவிற்கு மறுமலர்ச்சி தோன்றட்டும். உங்கள் பிள்ளைகளின் மீது காவல்துறை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்க உங்கள் உடல்நலமும், வயதும், மனமும் சம்மதிக்க மறுத்தால் விட்டு விடுங்கள்.

ஒரு வீட்டில் முதியவர்கள் இருந்தால், இளையதலைமுறை சந்தோஷப்பட வேண்டும். தங்களது மூத்த தலைமுறையை போல நீண்டநாள் வாழும் வாய்ப்பை, அவ்வீட்டின் இளைய தலைமுறையும் பெறுகிறது என்பது விஞ்ஞான உண்மை. நீண்ட நாள் வாழும் ஜீன்களிலிருந்துதான் நீண்ட நாள் வாழும் ஜீன்கள் உருவாக முடியும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top