வில்லிவாக்கம் ரயில்வே கேட் அருகே முட்புதரில் கிடந்த பெண் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். இதுபற்றி விசாரணை நடத்தியபோது பிச்சை எடுத்த பெண்ணை, கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்தவர் சிக்கினார்.
சென்னை வில்லிவாக்கம் ரயில்வே கேட் அருகே உள்ள புதரில் இருந்து கடந்த சில நாளாக பிணவாடை வீசியது. இதுபற்றி வில்லிவாக்கம் போலீசாருக்கு மக்கள் தகவல் கொடுத்தனர்.
உதவி கமிஷனர் கண்ணன் உத்தரவின்பேரில், ராஜமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் போலீசாருடன் நேற்று மாலை சம்பவ இடத்துக்கு சென்றார்.
புதருக்கு அடியில் கிடந்த பெண் உடல், போர்வையால் சுற்றப் பட்டு இருந்தது. சில நாளுக்கு முன் இறந்ததால் உடல் அழுகிய நிலையில் இருந்தது. சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இந்த நிலையில், இறந்த பெண் ரேவதி (36) என்று தெரிந்தது.
இதுசம்பந்தமாக, ராஜமங்கலம் பகுதி யில் பதுங்கியிருந்த பிச்சைக்காரன் முருகன்(40) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்திருப்பதாவது: ராஜமங்கலம் பாபா நகரில் இருவரும் பிச்சை எடுத்து வந்துள்ளனர்.
சமூக சேவகர் ஒருவர், வாரந்தோறும் அன்னதானம் வழங்குவார். அந்த இடத்துக்கு வரும்போது முருகனுக்கும் ரேவதிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்துள்ளனர்.
இருவரும் பல இடத்துக்கு சென்று ஜாலியாக இருந்துள்ளனர். ஒருநாள், வேறு ஒரு வாலிபருடன் ரேவதி ஜாலியாக இருப்பதை முருகன் பார்த்துவிட்டார். இதனால் ரேவதி மீது கோபத்தில் இருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, வில்லிவாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி ரேவதிக்கு கொடுத்துள்ளார். பின்னர், ரயில்வே கேட் பகுதியில் உள்ள புதருக்கு அழைத்து சென்று அவருடன் ஜாலியாக இருந்துள்ளார்.
பின்னர் போதை மயக்கத்தில் இருந்த ரேவதியை கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு முருகன் தப்பிவிட்டார். இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளது. முருகனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக