புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உயிர் தோன்றி மனிதன் உருவான வரலாறு
475 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான நம் உலகில் முதல் 150 கோடி ஆண்டுகள் வரை எந்த உயிரினமும் உண்டாகவில்லை. பின் முதல் முதலாக பல கோடி ஆண்டு வேதியியல் மாற்றங் களின் காரணமாகக் கடலுக்கடியில் ஒரு செல்
உயிரினம் உண்டானது. அந்த முதல் உயிரினம் ஏதோ ஒரு நாளில் இயற்கைக்குப் புறம்பான தெய்வீக சக்தியால் உருவாக்கப்பட்டது என்று யாராவது கருதுவீர்களானால் அவர்கள் மீது நாம் அனுதாபப்பட முடியுமேயல்லாது வேறொன்றும் செய்ய இயலாது. 150 கோடி ஆண்டு வேதியியல் மாற்றங்களின் (Organic Evaluation) விளைபொருள்தான் அந்த முதல் உயிரினம் கோடிகணக்கான ஆண்டு படிநிலை வளர்ச்சியின் காரணமாகப் பல செல் உயிரினமாகி, பின்நீரில் மட்டும் வாழக்கூடிய மீனினமாகி (Fishes) அதன்பிறகு இன்னும் கோடிக் கணக்கான ஆண்டுப் படிநிலை மாற்றத்தின் விளைவாக நீரிலும் நிலத்திலும் வாழ வல்லமையுள்ள தவளையினம் உருவாயிற்று. தவளையினத்திலிருந்து பாம்பு, பல்லி போன்ற ஊர்வன இனம் (Reptiles) தோன்றிற்று. கோடிக்கணக்கான ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்த டைனோசர் விலங்குகள் இந்த ஊர்வன வகையைச் சேர்ந்தவையே! இன்னும் கோடி கோடி ஆண்டுகள் உயிர்வேதியியல் படிநிலை மாற்றங்களின் காரணமாகப் பாலூட்டி இனமும் பறவையினமும் ஊர்வன இனத்திலிருந்து உருவாயின. பாலூட்டிகளின் படிநிலை மாற்றத்தின் ஒரு நிலையில் குரங்கு இனம் உண்டானது. அந்தக் குரங்கினத்திலிருந்து படிநிலை மாற்றம் அடைந்து இன்றைக்கு 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக மனித இனம் உண்டானது. இவையெல்லாம் ஊகமான செய்திகள் அல்ல. உடற்கூறியல், உடலியக்கவியல், உயிர்வேதியியல், இரத்த வகை ஒற்றுமை, மரபணுவியல், தடவியல் மற்றும் புதைபொருள் ஆராய்ச்சி, கதிரியக்கவியல் போன்ற பல்வேறு அறிவியல்கள் வழி கண்டறிந்த உண்மைகள். (Organic Evaluation is proved beyond doubt by Anatomical, Physiological. Biochemical, Blood Grouping, Genetic, Paleomological evidences and Fossil records and by the chromological age of fossils as proved by Radio Immumassay techniques).


மனித வாழ்வில் போலியான மதம் தோன்றிய வரலாறு
ஆக, 475 கோடி ஆண்டு வரலாற்றுக்குச் சொந்தமான உலகில் மனிதனின் வரலாறு வெறும் 20 லட்சம் ஆண்டுகளே! இந்த 20 லட்ச ஆண்டு மனித வரலாற்றில் 4500 ஆண்டுகளுக்கு முன்பு வரை மனித இனத்துக்கு மதம் கிடையாது! இன்றைக்கு மனித இனத்தை மத அடிப்படையில் பிளவு படுத்தி உலக அமைதியைக் கெடுத்து உலக அழிவுக்குக் காரணமாக நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற அனைத்து மதங்களும் 4500 ஆண்டுகளுக்குள் சில தன்னலக் கும்பல்களால் மக்களின் அச்சம் அறியாமை போன்ற பலவீனங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவையே! இடி, மின்னல், நிலச்சரிவு, வெள்ளம், எரிமலை, நில அதிர்வு, காட்டுத் தீ, ஆழிப்பேரலை போன்ற இயற்கைச் சீற்றங்களுக்கான அறிவியல் உண்மைகளை அறிந்திராது அச்சத்தால் நடுங்கியிருந்த மனித குலத்தை உண்மைகளுக்குப் புறம்பான காரணங்களை அவற்றிற்குக் கற்பித்துப் பொய்யான மதங்களை உருவாக்கி அடிமைப்படுத்தியது அந்தத் தன்னலக் கூட்டம் அறிவோடு எதிர்த்துப் பேசிய பகுத்தறிவாதிகள் அழிக்கப்பட்டனர். ஏன், எதற்கு, எப்படி என்று எதையுமே ஆராய்ச்சி செய்து பார் என்று ஏதென்சு நகரத்து இளைஞர்களின் சிந்தனையைத் தூண்டிய அறிஞர் சாக்ரடீசு நஞ்சு கொடுக்கப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்! பகுத்தறிவு பேசிய இத்தாலி நாட்டைச் சேர்ந்த புரூனோ என்ற பகுத்தறிவுவாதி 16.02.1600இல் ரோமன் சர்ச்சில் வைத்து உயிரோடு எரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட வரலாற்றையும் நாம் மறந்து விடுவதற்கில்லை! போலியான மதக் கருத்துகளை யாரும் எதிர்க்கத் துணியவில்லை! துணிந்த ஒரு சிலரோ மக்கள் கூட்டத்தின் முன்பாக எரிக்கப் பட்டனர். கல்லால் அடித்துக் கொல்லப்பட்டனர்! தூக்கிலிடப்பட்டனர்! கை கால்கள் துண்டிக்கப்பட்டனர்! இத்தகைய கொடுமையான தண்டனைகளை நேரில் கண்டபின் யாருக்குப் போலி மதக் கருத்துகளை எதிர்க்கத் துணிவுண்டாயிருக்கும்? இவ்வாறு அறிவியல் உண்மைகளுக்குப் புறம்பான கருத்துகளைத் தங்கள் மத நூல்களில் கொண்டுள்ள அனைத்து மதங்களும் மக்களின் அறியாமை, அச்சம், மூடநம்பிக்கை போன்றவற்றை அடித்தளமாகக் கொண்டு அழகாகவும் உறுதியாகவும் மனித சமுதாயத்தில் நிலை நிறுத்தப்பட்டன! உலகில் உள்ள அத்தனை மத நூல்களிலும் அறிவியல் உண்மைகளுக்குப் புறம்பான செய்திகள் தாம் பிரபஞ்சத்தைப் பற்றி, அதன் தோற்றத்தைப் பற்றி, மனித குலம் உருவான வரலாற்றைப் பற்றிக் காண முடிகின்றது. தெய்வீகமானதென்றும் புனிதமானதென்றும் மத நம்பிக் கையாளர்களால் போற்றப்படுகின்ற அனைத்து மத நூல்களும் பொய் மூட்டைகள் எனும்போது அவைகூறும் கருத்துகளும் அவை காட்டும் சொர்க் கம், நரகம் போன்றவையும் எவ்வளவு போலியானவை என்பது நான் கூறாமலேயே உங்களுக்கு விளங்கும். எனவேதான் தெளிவாக உறுதியாக ஒரு கருத்தை வலியுறுத்த விரும்புகின்றேன். இன்றைய மனித குலத்துக்குத் தேவை மத நல்லிணக்கம் அல்ல! மாறாக மதமற்ற ஒரு நிலை! உண்மைக்குப் புறம்பான போலிக் கருத்தோடு உடன்பாடும் தேவை யில்லை! இணக்கமும் தேவையில்லை! மதங்களற்ற மனித சமுதாயமே இன்றைய மானுட அமைதி வாழ்விற்கு மகத்தான தேவை!


ஜாதிகள் தோன்றிய வரலாறு
உலகில் எந்த மதத்திற்கும் இல்லாத ஒரு தனிச் சிறப்பு இந்துமதத்திற்கு உண்டு! அதுதான் ஜாதியத்தை இந்து மதமும் அதன் கடவுள்களும் அங்கீகரிக்கின்ற அருவருக்கத்தக்க செயல்! இந்த மதத்தின் ரிக் வேதம் தொடங்கி மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்களிலும் பகவானால் அருளப்பட்டதாகக் கதைக்கப்படும் பகவத் கீதையிலும் மனித குலத்தை இழிவுபடுத்தும் ஜாதியம் வலியுறுத்தப்பட்டு நியாயப்படுத்தப்படுகின்றது. இந்து மதத்தின் முதல் வேதமாகிய ரிக் வேதத்திலேயே பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள் சமுதாயப் படிக்கட்டில் மிக உயர்ந்த சமூகமாகவும், அடுத்து, தோளில், தொடையில் மற்றும் பாதத்தில் பிறந்தவர்கள் அடுத்தடுத்து தாழ்ந்த சமூகங்களாகவும் திட்டமிட்டு எழுதப்பட்டுள்ளது! இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஜாதிகள் உருவாகி மனிதகுல ஒற்றுமைக்கு எதிரான ஜாதிச் சண்டைகளும், கலவரங்களும் உருவாகக் கருவான இந்த மனிதகுல விரோதக் கருத்தை பகவத் கீதையில் கிருஷ்ணன் பகர்கிறாராம்! சந்தேகம் உள்ளவர்கள் அடியிற்காணும் அசல் கீதை வரிகளைப் படித்துத் தெளிவு பெறுக!
சமஸ்கிருதப் பாடல்
பகவத் கீதை - அத்தியாயம் 4 - பாடல் 13
Catur-vamyam maya srstam guna - kama - vibhagasah
tasya kartaram api mam viddhy akartaram avyayam
பாடலின் ஆங்கில உச்சரிப்பு.
ஆங்கிலத்தில் பொருள்
The four divisions of human order were created by Me according the diffencs in quality, activities and aptitude; although the creator of this, know Me as the man - doer being immutable.
தமிழ் மொழியில்
மனிதர்களின் நான்கு வருணங் களையும் குணத்தின் மற்றும் செயல் பாடுகளின் அடிப்படையில் நான்தான் படைத்தேன். படைத்த என்னாலேயே இந்த அமைப்பை மாற்ற முடியாது
கடவுள் மனித குலத்தின் பிரிவு களையும் குணத்தின் மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில்தான், தான் படைத்ததாக வாக்குமூலம் தருவதோடு படைத்த தன்னால்கூட இந்த அமைப்பை மாற்ற முடியாது என்று ஆணித்தரமாக அடித்துக் கூறினால் மனித குலத்தின் ஜாதி ரீதியிலான பிரிவுகளை எவ்வளவு ஆழமாக இந்து மதம் வலியுறுத்து கின்றது என்பதை மனிதநேயச் சிந்தனையாளர்களின் முடிவுக்கே விட்டு விடுகின்றேன். 20 லட்ச ஆண்டுகள் மனித வரலாற்றிலே எந்த நாட்டிலும் ஜாதிகள் தோன்றவில்லை. இந்தியாவில் மட்டும் ஒரு வகை தன்னல ஜாதிகளால் 3000 - 4000 ஆண்டுகளுக்கு முன்பாக வேதங்கள் கற்பிக்கப்பட்டு அதன் அடிப்படையில் செயற்கையாகத் திணிக்கப்பட்டது தான் ஜாதி எனும் சமுதாய நோய்! நம் தமிழகத்தை எடுத்துக் கொண்டோமேயானால் 2000 ஆண்டுகள் முன்புவரை ஜாதிகள் கிடையாது. ஒரே இனமாக வாழ்ந்து வந்த தமிழகத்தில், வடநாட்டு உயர் சாதியினர் புகுந்து, நம் மன்னர்களைப் புரியாத மொழி (சமஸ்கிருதம்) மூலம் ஏமாற்றி, தம்மை ஆட்சி ஆலோசகர் களாக நியமிக்கச் செய்து, அவர்களின் நச்சுக் கருத்துக்களின்படி நம் மன்னர் களை ஆட்சி நடத்தச் செய்தார்களோ அன்று முதல் பற்றிக் கொண்டு வேகமாகப் பரவி இந்தச் சமுதாயத்தைச் சீரழித்து வருவதுதான் இந்தச் சாதி நோய்!
தமிழ்ச் சமுதாயத்தைப் பாழ்படுத்தி அழித்து வரும் இந்தச் சமுதாய நோய்க்கிருமியை அழிக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமை என்று வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன். அத்தகைய நல்லெண்ண அடிப்படையில் தான் இத்தகைய சாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெறுகின்றன. சாதியம் செயற்கையானது. போலியானது, சதியினால் திணிக்கப்பட்டது. சமுதாயச் சீரழிவுக்குக் காரணமானது. மனித நேயச் சிந்தனைக்கு எதிரானது என்ற உண்மையை உணர்ந்து கொண்டு படித்தவர்கள் பண்பாளர்கள் சமதர்மச் சிந்தனையாளர்கள் மற்றும் பொதுநல விரும்பிகள் அனைவரும் சமூக ஒற்றுமைக்குத் தீங்கு விளைவிக்கும் இந்தச் சாதிய நோய்க்கிருமியை அழிக்க முன்வர வேண்டும். சாதியத் தீயை அணைப்போம்! சமத்துவப் பயிர் வளர்ப்போம்! மனிதம் காப்போம்!!

1 கருத்து:

 
Top