புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஆனைமுகனுக்குத் தம்பியாய் வந்த ஆறுமுகனே! சிவசுப்பிரமணியனே ஒளிமிகுந்த பன்னிரு தோள்களைக் கொண்டவனே! பன்னிருகைப் பரமனே!வெற்றி வேலாயுத மூர்த்தியே! செவ்வேள் முருகனே! திருமாலின் மருகனே! குழந்தைக் கடவுளே!எனக்கு மனநலத்தையும்,
உடல்நலத்தையும் தந்தருள வேண்டுகிறேன்.

அம்மையப்பர் ஈன்றெடுத்த அருந்தவப்புதல்வா! தேன்சிந்தும் புது மலர்களை விரும்பி அணிபவனே! திருத்தணி முருகனே! கந்தனே! கடம்பனே! கார்த்திகேயனே! சூரபத்மனுக்கு வாழ்வு தந்த வள்ளலே! வெற்றிவீரனே! வள்ளிக்கு வாய்த்தவனே! வாழ்வில் தடைகளைப் போக்கி நல்வழி காட்டுவாயாக.

குயிலைப் போல இனிய மொழி பேசும் தெய்வானை மணாளனே! வள்ளிநாயகியை காதல் மணம் செய்தவனே! கருணை சிந்தும் விழிகளைக் கொண்டவனே! வடிவேலனே! விரைவில் என் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த அருள்புரிவாயாக.

மலைக்கு நாயகனே! மயிலேறிய மாணிக்கமே! சேவற்கொடியோனே! சிவசக்தி மைந்தனே!
நம்பியவரைக் கரை சேர்ப்பவனே! காங்கேயனே! அறுபடைவீடுகளில் வீற்றிருந்து அருளாட்சி புரிபவனே!
இன்னல்களைப் போக்கி வாழ்வில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நீயே தர வேண்டும்.

உலகம் அனைத்தையும் ஆள்பவனே! நல்லவர்க்கு அருள்பவனே! வெற்றி வேலைக் கையில் ஏந்தியவனே! குற்றம் பொறுக்கும் குணக்குன்றே! சிவகுருநாதனே! எட்டுத்திக்கிலும் அருளாட்சி புரிபவனே! சரவணனே! சேவற்கொடியோனே!
என் வசந்தத்தை வரவழைக்கும்படி சேவலைக் கூவச் செய்வாயாக.

தாமரைத் திருவடிகளைக் கொண்டவனே! வேதம் புகழும் உமைபாலனே! குறிஞ்சியின் முதல்வனே! துன்பமெல்லாம் போக்கி, ஆறுதலைத் தந்தருளும் ஆறுமுகப் பெருமானே! பிரணவத்திற்குப் பொருள் உரைத்த குருநாதனே! நீயே எனக்கு ஞானத்தை வழங்கி அருளவேண்டும்.

தண்டாயுதபாணியே! சிங்கார வேலனே! ஒருமையுடன் தியானிக்கும் பக்தர்கள் உள்ளத்தில் வீற்றிருக்கும் குகப்பெருமானே! கிரவுஞ்சகிரியை இருகூறாகப் பிளந்த வேலவனே! அகத்தியருக்கு உபதேசித்த என் ஆண்டவனே! எனக்கு நல்லறிவையும், மதிநுட்பத்தையும் கொடுப்பாயாக.

வேதத்தின் உட்பொருளே! அழகில் மன்மதனை வென்றவனே! பேரழகனே! தெய்வசிகாமணியே! குன்றுதோறும் வீற்றிருக்கும் குமரப்பெருமானே!
தந்தைக்கு பாடம் சொன்ன தனயனே! சரவணப்பொய்கையில் உதித்தவனே! அவ்வைக்கு கனி ஈந்த சிவபாலனே! திருச்செந்தில் ஆண்டவனே! என் மன விருப்பங்களை நிறைவேற்றி வைப்பாயாக.

சண்முகப்பெருமானே! நான் மட்டுமல்லாமல், என்னைச் சேர்ந்தவர்களான மனைவி, பிள்ளைகள், உறவினர், நண்பர்கள் என்று அனைவரையும் உன் அன்பர்களாக வாழச் செய்வாயாக. உன்னருளால் எங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் என்றும் மகிழ்ச்சி நிலைத்திருக்கட்டும். பக்தர்கள் வேண்டும் வரமருளும் ஞானதண்டாயுதபாணியாக பழநியில் முருகன் வீற்றிருக்கிறார். தைப்பூச நன்னாளில் அப்பெருமானை நினைந்து வணங்க இப்பிரார்த்தனையைத் தந்துள்ளோம். பக்தியுடன் படித்து, எல்லா வளமும் பெற்று மகிழுங்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top