புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கவர்ச்சி நடிகை அல்போன்சாவின் காதலன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அல்போன்சா தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் புதுப்பட்டினத்தை சேர்ந்தவர் வினோத் குமார்(26). இவர் சினிமாவில் நடிப்பதற்காக தனது
பெயரை சாய் என்று மாற்றி வைத்துக் கொண்டார். மறைந்த நடிகர் முரளி கடைசியாக நடித்த “கவசம்“ என்ற படத்தில் 2வது கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. மலையாள படங்களிலும் துணை நடிகராக நடித்து வந்தார்.

பிரபல கவர்ச்சி நடிகை அல்போன்சாவின் சகோதரர் ராபர்ட். இவரும் பிரபல சினிமா டான்ஸர். இந்நிலையில் வினோத் குமார் நன்றாக நடனம் ஆடுவதால் பட வாய்ப்புகள் கேட்டு ராபர்ட்டை அணுகினார். இது நட்பாக உருவாகியது. 2 பேரும் நண்பர்களாக இருந்தனர். நடிகை அல்போன்சாவின் கணவர் நோபல். இவர்களுக்கு ஆலியா(4)  மகள் உள்ளார். இந்நிலையில் ராபர்ட் சகோதரி அல்போன்சாவை வினோத் குமாருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இதனால் அல்போன்சாவும், வினோத் குமாரும் பழகி வந்தனர். இந்த பழக்கம் நெருக்கமானது.

இதனை அறிந்த அல்போன்சாவின் கணவர் நோபல் கண்டித்துள்ளார். வினோத் குமாருடன் பழகக் கூடாது என்று எச்சரித்துள்ளதாக தெரிகிறது. ஆனால் அதனை கேட்காமல் அல்போன்சா அவருடன் பழகி வந்துள்ளார். இதனால் கணவன்,மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நோபல் குழந்தை ஆலியாவை அல்போன்சாவிடம் விட்டு விட்டு துபாய் சென்று விட்டார்.

இதையடுத்து விருகம்பாக்கம் அபுசாலி தெரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டிலேயே வினோத் குமாரை அல்போன்சா தங்க வைத்தார். 2 பேரும் காதலித்து வந்தனர். மேலும் விவாகரத்து செய்த பிறகு திருமணம் செய்து கொள்வதாக அல்போன்சா அவரிடம் கூறி இருந்தார். ஆனால் நாட்கள் தள்ளிப்போய் கொண்டே போனது திருமணம் நடக்கவில்லை.

இதனால் வினோத் குமார், “தன்னை திருமண செய்து கொள்ளும்படி“ அல்போன்சாவை தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.  அடிக்கடி 2 பேருக்கும் வாக்குவாதமும் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவும் திருமணம் செய்து கொள்ளும்படி அல்போன்சாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. பின்னர், 2 பேரும் தனித்தனி அறையில் தூங்க சென்று விட்டனர். இந்நிலையில் நள்ளிரவு தண்ணீர் குடிப்பதற்காக அல்போன்சா எழுந்தார். அப்போது வினோத் குமார், அல்போன்சாவின் பேன்ட்டால் தூக்கு போட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அல்போன்சா, உடனடியாக பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஒரு பெண் டாக்டரை உதவிக்கு அழைத்துள்ளார்.

அவர் வந்து பரிசோதனை செய்ததில் வினோத் குமார் இறந்து விட்டார் என்பது தெரிந்தது. பின்னர் அல்போன்சா விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இதற்கடையில் வினோத் குமார் தற்கொலை செய்து கொண்டது குறித்து அவரது தந்தை பாண்டியனிடம் அல்போன்சா தகவல் கொடுத்தார். அவர் விரைந்து வந்தார். “மகன் சாவில் மர்மம் இருக்கிறது. அவனை கொலை செய்து இருக்கிறார்கள்“ என்று விருகம்பாக்கம் போலீசில் அவர் புகார் கொடுத்தார்.

இதையடுத்து போலீசார் அல்போன்சாவிடம் விசாரணை நடத்தினர். பிறகு அவர் அழுது கொண்டே வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டிற்கு சென்றதும் காதலன் வினோத் குமார் தூக்கில் தொங்கிய அறையில் அழுது கொண்டே இருந்துள்ளார். திடீரென அவர் அங்கு இருந்த அளவுக்கு அதிமான தூக்கமாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். இதனை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை சாலிகிராமம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்கின்றனர். விருகம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

“மகனை கொன்று விட்டனர்’’

வினோத் குமாரின் தந்தை பாண்டியன், திருக்கழுக்குன்றம் அதிமுக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராக உள்ளார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தாயார் ராஜேஸ்வரி. தம்பி மோகன். கல்பாக்கத்தில் ஸ்டூடியோ வைத்துள்ளார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மகன் வினோத் குமாரின் உடலை பார்த்து தந்தை பாண்டியன் கதறி அழுதார். பின்னர் அவர் கூறுகையில், “சினிமாவில் பெரிய நடிகராக வரவேண்டும் என்று எனது மகன் வினோத் குமார் மிகவும் வெறியோடு இருந்தார். அதற்காக கடுமையாக உழைத்து வந்தான். இதற்காக லட்சக்கணக்கில் நான் அவனுக்கு பணம் கொடுத்தேன். 

ராபர்ட் அறிமுகம் மகனுக்கு எப்போது கிடைத்ததோ அப்போது இருந்து எங்களை விட்டு பிரிந்து சென்று விட்டான். என் மகன் நன்றாக நடனம் ஆடுவான் என்பதால் ராபர்ட் இயக்கிய ஒரு ஆல்பத்தில் மகன் நடித்தான். இதையடுத்து வினோத்குமார் சினிமாவில் நடிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வான் என்பதை அறிந்து கொண்டு ராபர்ட் அல்போன்சாவை அவனுடன் பழக வைத்துள்ளார்.

பின்னர் 2 பேரும் சேர்ந்து என் மகனிடம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கியுள்ளனர். இந்நிலையில் “நல்ல கதை ஒன்று உள்ளது அதனை தயாரித்து நீயே நடி’’ என்று ராபர்ட் கூறியுள்ளார். ஆனால் அதற்கு என் மகன் சம்மதிக்கவில்லை. எப்படியோ மிரட்டி அவனை அந்த படத்திற்கு பூஜை போட வைத்துள்ளார். படத்தின் பெயர் “சங்கு’’. இதில் அல்போன்சாவும் நடிக்கிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் அல்போன்சா எனது மகன் மோகனுக்கு போன் செய்து, 

“உனது அண்ணன் வினோத் தற்கொலை செய்து விட்டார்’’ என்று கூறியுள்ளார். இதை கேட்ட எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பதற்றத்துடன் அல்போன்சா வீட்டிற்கு காரில் வந்தேன். அப்போது அல்போன்சா மகனின் உடலை வீட்டில் விரிக்கும் பெரிய மிதியடி ஒன்றால் மூடி வைத்திருந்தார். நான் திறந்து பார்த்த போது மூக்கு, காது, வாய் போன்றவற்றில் ரத்த காயம் இருந்தது. என் மகனை கொன்று விட்டாயே என்று அவருடன் வாக்குவாதம் செய்தேன். அல்போன்சாவுடன் சேர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். ஆனால் மகன் கேட்கவில்லை. அவனது சினிமா ஆசை நிராசையாகி விட்டது. இவ்வாறு பாண்டியன் கண்ணீருடன் கூறினார்.


வினோத் அவசர முடிவு
தூக்க மாத்திரைகளை சாப்பிட்ட அல்போன்சா, சாலிகிராமம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு கண்ணீருடன் இருந்த அல்போன்சாவின் தாயார் ஓமனா கூறுகையில், “நான் கணவர் அந்தோணியுடன் வளசரவாக்கத்தில் வசித்து வருகிறேன். என் மகள் அல்போன்சாவும் வினோத் குமாரும் பழகுவது எனக்கு தெரியும். ரொம்ப நல்ல பையன். அவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அல்போன்சா என்னிடம் கூறி சம்மதம் வாங்கி விட்டார். விவாகரத்து வாங்கிய பிறகு திருமணம் செய்து வைக்க இருந்தோம். ஆனால் என்ன வென்று தெரியவில்லை. திடீரென வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியாக இருக்கிறது. அவசர முடிவு எடுத்து விட்டார். இந்த துக்கத்தில் என் மகள் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு விட்டார்’’ என்றார்.

திடீர் மாயம், போலீஸ் அதிர்ச்சி
வினோத்குமார் தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்ததும் அல்போன்சா வீட்டிற்கு அவரது தந்தை பாண்டியன் வந்தார். அடுக்குமாடி குடியிருப்பு கீழ் தளத்தில் வைக்கப்பட்டிருந்த மகன் உடலை பார்த்து கதறிய அவர் திடீரென அல்போன்சாவை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. வாக்குவாதம் செய்த அவரை அங்கிருந்த போலீசார் சமாதானப்படுத்தி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். இதையடுத்து அல்போன்சா அழுது கொண்டே வீட்டிற்கு சென்று விட்டார். இதற்கிடையில் பாண்டியனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அல்போன்சாவிடம் விசாரணை நடத்துவதற்காக அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர். ஆனால் வீடு பூட்டப்பட்டிருந்தது.
பின்னர்தான், அல்போன்சா தூக்க மாத்திரை சாப்பிட்டுவிட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றது தெரிந்தது. அங்கு சென்று போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

துபாய்க்கு சென்று வந்த பிறகுதான் தற்கொலை

ஒரு காலத்தில் தமிழில் கவர்ச்சி நடிகையாக அல்போன்சா திகழ்ந்தார். திருமணத்திற்கு பிறகு அவர் நடிப்பதை நிறுத்தி விட்டார். ஆனால் வெளிநாடுகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் நடனம் ஆடி வந்தார். சில நாட்களுக்கு முன்பு துபாயில் நடக்கும் கலை நிகழ்ச்சி ஒன்றில் நடனம் ஆடுவதற்காக அல்போன்சாவும் வினோத் குமாரும் சென்றனர். பின்னர் நேற்றும் தினம் இரவு தான் விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு வந்தனர். அப்போது திருமணத்தை பற்றி வினோத் குமார் பேசியுள்ளார். அப்போது அல்போன்சா விவாகரத்து பெற்ற பிறகு திருமணம் செய்து கொள்வதாக கூறியதாக தெரிகிறது. இதனால் 2 பேருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்துதான் வினோத் குமார் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

வினோத் குமார் உடல் ஒப்படைப்பு

ராயப்பேட்டை அரசு மருத்துமவமனையில் நேற்று மாலை டாக்டர்கள் வினோத் குமார் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பிறகு அவரது தந்தை பாண்டியனிடம் உடலை ஒப்படைத்தனர். விருகம்பாக்கம் போலீசார் தற்கொலை(174) என்றே வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு வேறு ஏதேனும் கூடுதலாக வழக்கு பதிய வேண்டும் என்று முடிவு செய்யப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top