புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பூமியைச் சுற்றிவரும் சந்திரன் பௌர்ணமி அன்று முழு நிலவாகத் தோன்றி மிகப் பிரகாசமாகக் காட்சிதரும். இந்தப் பௌர்ணமி தினமானது மாதம் ஒருமுறை வந்தாலும் சித்திரை மாதம் வரும் பௌர்ணமிக்கு சில தனிச் சிறப்புக்கள் உள்ளன.மாதம் தோறும் வரும் பௌர்ணமி நாளில்
மலைக்கோவில்களுக்குச் சென்று மக்கள் கிரிவலம் வருகின்றனர்.எனினும், சித்திரைப் பௌர்ணமியன்று கிரிவலம் வருதல், கோவில்களிலும் புனிதத்தலங்களிலும் தம் குடும்பத்தாருடன் பொங்கல் வைத்தல் போன்றன சிறப்பனவையாகும்.
சித்திரைப் பௌர்ணமியானது, சித்திரகுப்தனாரின் திருமண நாளாகும். அவர் நமது பிறப்பு, இறப்பு கணக்குகளைப் பார்த்துவரும் எமதர்மனின் கணக்குப்பிள்ளை ஆவார். பூமியில் மனிதர்கள் செய்யும் பாவ,புண்ணியங்களைக் கணக்கெடுத்து அவைகளுக்குத் தகுந்தால் போல் நமக்குரிய சொர்க்க, நரகங்களை முடிவு செய்வதே சித்திர குப்தனின் கடமையாகும். எனவே அவரது திருமண நாளான சித்திரா பௌர்ணமியன்று பொங்கலிட்டும் கிரிவலம் வந்தும் இறைவனை வழிபடும்போது, சித்திர குப்தனை மனதில் நினைத்து ” நாங்கள் மலையளவு செய்த பாவங்களை கடுகளவாகவும் கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக்கொள்” என வேண்டி வழிபட வேண்டும்.
மேலும் அன்றைய தினம் புனித நதிகளில் நீராடியும் நமது பாவங்களைப் போக்கிக்கொள்ளலாம். சித்திரா பௌர்ணமியில் சித்திரை நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் சேர்ந்து வருவதால், அன்று கடலில் நீராடுவது மிகவும் சிறப்பானதாகக் கூறப்படுகின்றது. ஏனெனில் அன்றைய தினம் கடலில் நீராடுபவர்களின் பாவங்களை கழித்தும் சிலவற்றை தாமே ஏற்றுக்கொள்ளவும் அங்கே பிரசன்னமாகியுள்ள பித்ருக்கள், மகரிஷிகள், சித்த புருஷர்கள், யோகியர்கள் தயாராக இருப்பார்களாம்.   

சித்ரா பௌர்ணமியன்று பெரும்பாலான ஊர்களில் உள்ள அம்மன் கோவில்களில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்வார்கள்.எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ள சித்ரா பௌர்ணமியை நாம் சிறப்புடன் அனுஷ்டித்து பயன் பெறுவோம்.

சித்ரா பௌர்ணமி விரதமுறை:
சித்ரா பௌர்ணமி அன்று காலையில் பூஜை அறையில் விநாயகர் படத்தை வைத்து அருகில் ஏடும் எழுத்தாணியும் (கொப்பி&பேனா ) வைத்து, ஒரு பேப்பரில் ”சித்திர குப்தன் படியளப்பு” என்று எழுதி வைக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண் பொங்கலை ஒரு தலை வாழை இலையில் வைத்து படைக்க வேண்டும். படையலுடன் மாங்காய், தேங்காய், பலவகை காய்கறிகள், பருப்புகள் , தயிர் கடையும் மத்து, உளி போன்றவற்றையும் வைக்க வேண்டும்.
தொடர்ந்து தேங்காய் உடைத்து தீப ஆராதனை காட்டி வழிபட்டு பொங்கலை எல்லோருக்கும் தானமாகக் கொடுக்க வேண்டும்.
இந்த வழிபாட்டின்போது ”சித்ரா குதம் மஹா ப்ராக்ஜம் லேகணீ பத்ர தாரிணம் சித்ர ரத்னாம் பரதாரம் மத்யஸ்தம் சர்வ தேஹினாம்” என்ற மந்திரத்தைக் கூறி சித்ர குப்தனை வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.
இலங்கையில் குறிப்பாக தமிழர் வாழும் பகுதிகளில் இந்துக்கள் இறந்துபோன தமது தாயாரின் ஆத்மாவை நினைத்து அனுஷ்டிக்கும் ஒரு விரதமாக இது அமைந்துள்ளது. இங்கு ஆலயங்களில்விஷேட பூசைகளும் குறிப்பாக அம்மன் கோவில்களிலும் சில பொது இடங்களிலும் ஊர்மக்கள் ஒன்றுகூடி அரிசி, தேங்காய் போன்ற பொருட்களைக் கொண்டு சித்திரைக்கஞ்சி சமைத்து அனைவருக்கும் கொடுப்பதோடு சித்திர குப்தனின் கதையைப் படித்தும் இவ் விரதத்தை அனுஷ்டித்து இறந்த தாயாரின் ஆத்மாவைப் பூசிப்பது வழக்கமாகும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top