புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


எதிர்வரும் 21 ஆம் திகதி உலகம் அழியுமா? அழியாதா? என்ற விடயம் இவ்வருடத்தில் அதிகம் பேசப்பட்ட ஏன் ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்ட விடயங்களில் ஒன்றாக மாறியுள்ளது.இதனை நினைத்துப் பலர்
அச்சம்கொண்டுள்ளதுடன், உளரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் அழியும் என்பதற்குப் பல விசித்திரமான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன, வரலாற்றுக் குறிப்புகள் அலசி ஆராயப்படுகின்றன, நாம் முன்னர் அறிந்திராத பல கதைகள் சொல்லப்படுகின்றன.

இவற்றில் முக்கியமானதொன்று மாயன் நாட்காட்டி பற்றியதாகும். அதாவது ‘மாயா’ நாகரீகத்தின் வழித் தோன்றிய மாயன் நாகரீகத்தைச் சேர்ந்த மக்களின் நாட்குறிப்பானது நாம் பாவிக்கும் நாட்காட்டியின் 2012-12-21 திகதியுடன் முடிவுக்கு வருகிறது என்பதாகும்.

இதன் முடிவின் பின் மாயன்களின் படைப்புக்கும் யுத்தத்துக்கும் (God of war and creation)பொறுப்பான கடவுளான போலோன் யோக்தே (BOLON YOKTHE) இன் வருகை இடம்பெறும் என மாயன்கள் கணித்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லாத போதிலும் சில வரலாற்று சான்றுகள் பூதாகரமாக்கப்பட்டதால் உலகம் அழியப்போகின்றது என்ற எண்ணமானது பலரின் மனதில் விதைக்கப்பட்டுள்ளது.

சாதாரண விதையாக இருந்த பய உணர்வானது தற்போது வேரூன்றி விருட்சமாக மாறியுள்ளது.பலர் இன்று இவ்விடயத்தினை எண்ணி அச்சத்துடன் வாழ்ந்து வரும் நிலையில் மெக்ஸிக்கோவில் வசித்து வரும் சுமார் 800,000 மாயா இனத்தைச் சேர்ந்தவர்கள் தமது பொழுதினை எவ்வித பதற்றமும் இன்றிக் கழித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக மெக்ஸிகோவின் யுகடான் தீபகற்பப்பகுதியில் வாழும் மக்களும் தமது அன்றாடக் கடமைகளை எவ்வித பதற்றமும் இன்றி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.எதிர்வரும் 21.12.2012 , அதாவது நீண்ட மாயன் நாட்காட்டியின் 5,125 ஆவது ஆண்டு சுழற்சி ஏற்படும் தினம் தொடர்பில் மாயா இனத்தவர்களிடம் கேட்கப்பட்ட பொழுது அவர்கள் இது தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லையாம்.

உலகம் அழியப்போவது தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாதெனவும், கடந்த 2006 ஆம் ஆண்டும் ‘6-6-6’ (June 6, 2006) இன் போதும் பலர் இதனையே தெரிவித்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.இதேபோல் அவ்வினத்தைச் சேர்ந்த மற்றையோரும் எதுவித கலக்கமோ பயமோ இன்றி தமது பொழுதினை வழமைபோல கழித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

இதிலிருந்து புலப்படுவது என்னவெனில் உலக அழிவு தொடர்பில் நாம் பெரிதாக அலட்டிக்கொண்ட போதிலும் மாயா இனத்தவர்களோ இவ்விடயம் தொடர்பில் பெரிதாக ஆர்வம் செலுத்தவில்லையெனத் தோன்றுகின்றது.பயந்தவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இவ்விடயத்திலும் சிறிய சிறிய விடயங்களும், உதாரணமாக காலநிலை மாற்றம் போன்றவையும் பயத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மாயன்கள் அக்காலப்பகுதியில் அசாத்திய திறன்கள் மிக்க இனக்குழுவாக திகழ்ந்தது என்ற போதிலும் அவர்களின் நாட்காட்டி மற்றும் சில வரலாற்று சான்றுகளை வைத்து உலகம் அழியப் போகின்றது என்ற அச்சத்தில் பலர் நாட்களைக் கழிப்பது சற்று வேதனைக்குரிய விடயமே!

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top