புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இந்தியாவில் பாளை பள்ளியில் மாணவிகளின் ஆடைகளை அவிழ்த்து சித்ரவதை செய்ததால் கொதிப்படைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். இதைத் தொடர்ந்து விடுதி வார்டன் உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பாளை ஐகிரவுண்ட் பகுதியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 700க்கும் அதிகமானோர் படித்து வருகின்றனர். மாணவிகள் தங்கி படிக்க விடுதி வசதியும் இருக்கிறது. இதில் 80க்கும் அதிகமான மாணவிகள் உள்ளனர். சில நாட்களுக்கு முன் விடுதி கழிவு நீர் குழாயில் நாப்கின் அடைத்துக் கொண்டது.

இதைப்பார்த்த பெண் வார்டன், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவிகள் 20 பேரை அழைத்து, பாத்ரூமில் நாப்கின்களை போட்டது யார்? என விசாரித்துள்ளார். தங்களுக்கு எதுவும் தெரியாது என மாணவிகள் கூறியுள்ளனர். ஆனால் வார்டன் மாணவிகளை அசிங்கமாக திட்டியதுடன் அவர்களின் ஆடைகளை அவிழ்த்து அவர்களை சோதித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் விடுதியில் இருந்து வெளியேறி தங்கள் ஊர்களுக்கு சென்றனர். பெற்றோர்களிடம் கூறி கண்ணீர்விட்டு அழுதனர்.

இதனால் கொதிப்படைந்த பெற்றோர் இன்று காலை பள்ளிக்கு படையெடுத்து வந்தனர். அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு, சம்பந்தப்பட்ட வார்டன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. தகவலறிந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் கண்ணதாசன், ஐகிரவுண்ட் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தினர். சம்பந்தப்பட்ட பெண் வார்டன் மற்றும் இரு ஊழியர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், இனி இதுபோன்று நடைபெறாது என்றும் உதவி ஆணையர் கண்ணதாசன் உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

தற்கொலைக்கு முயன்ற மாணவிகள் வார்டனால் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை ஒருவர் கூறுகையில், ‘பள்ளி விடுதியில் எங்கள் பிள்ளைகளை தங்கள் வீட்டு பிள்ளைகள் போல் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் சிரமப்பட்டு ஆஸ்டலில் சேர்த்துள்ளோம். பாத்ரூமில் துணி அடைத்துக்கொண்டது என்றால் அதை முறைப்படி விசாரித்திருக்கவேண்டும். அதைவிடுத்து காட்டு மிராண்டித்தனமாக ஆடைகளை அவிழ்த்து கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள். இதனால் அவரவர் வீடுகளுக்கு ஓடிவந்த பிள்ளைகளில் சிலர் அவமானம் தாங்காமல் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். அந்த அளவுக்கு அவர்கள் மனம் பாதித்துள்ளது. இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியையிடம் முறையிட்டோம். அதற்கு அவர், இந்த பிரச்னை பற்றி இத்துடன் விட்டு விடுங்கள், போலீஸ் அது இது என்று போனால் உங்கள் பிள்ளைகளின் டிசியை கொடுத்துவிடுவோம் என்று மிரட்டுகிறார்’ என்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top