புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஒரே பெயர் கொண்ட இரண்டு பேருடைய வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டதுதான் டேவிட் படத்தின்
கதை.

1999-ம் ஆண்டு மும்பையில் கித்தாரிஸ்டாக இருக்கும் ஜீவா, தன்னுடைய வாழ்நாளில் ஒருமுறையாவது வெளிநாடு டூர் சென்று தனது திறமையை நிரூபிக்கவேண்டும் என்ற லட்சியத்துடன் சுற்றி வருகிறார். அவருடைய அன்பான அப்பாவாக நாசர். இவர் எப்போதும் ஏசுவின் நாமத்தை ஜெபித்துக் கொண்டே இருக்கிறார்.

இவர் எல்லோரையும் மதம் மாற்றுகிறார் என்று உள்ளூர் எம்.எல்.ஏ., தனது சுயவிளம்பரத்துக்காக, தன்னுடைய ஆட்களுடன் வந்து நாசரை அடித்து துவம்சம் செய்கிறார். தனது, தந்தையை அவமானப்படுத்தியவர்களை பழிவாங்க துடிக்கும் ஜீவா, தனது லட்சியத்தில் வெற்றியடைந்தாரா? அல்லது அவர்களை பழிவாங்கினாரா? என்பதே மீதிக்கதை

இன்னொரு பக்கம், 2010-ம் ஆண்டு கோவாவில் மீனவனாக வருகிறார் விக்ரம். தன்னுடைய மனைவி வேறொருவனிடம் ஓடிவிட்டாள் என்ற ஏக்கத்தில் முழுநேர குடிகாரனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவருக்கு அவ்வப்போது ஆலோசனை வழங்கி, புத்திமதி சொல்லும் பெண் தோழியாக தபு.

அந்த ஊரில் பெரிய செல்வந்தரின் மகளான இஷா ஷெர்வானியை பார்த்தவுடனேயே இவருக்குள் ஈர்ப்பு ஏற்பட்டு விடுகிறது. ஆனால், அவளை தன்னுடைய நண்பன் கல்யாணம் செய்துகொள்ளப் போகும் சேதி பின்னர் தெரிய வருகிறது. இருந்தும், அவளை திருமணம் முடிக்கவேண்டும் என்று முழு முயற்சியில் இறங்குகிறார். இறுதியில், இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்ததா? என்பதே மீதிக்கதை.

மும்பையில் கித்தாரிஸ்டாக வரும் ஜீவா படு ஸ்மார்ட். சண்டைக்காட்சியில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவதில் கெட்டிக்காரர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். ஆனால், எந்நேரமும் வில்லன்களிடம் சென்று சண்டை போட்டு, இவர் அடிவாங்கி வருவது சலிப்பையே ஏற்படுத்துகிறது.

கோவாவில் மீனவனாக வரும் விக்ரம், சதா எந்நேரமும் குடித்துக் கொண்டே இருக்கிறார். டாஸ்மாக் கடைக்கு விளம்பர தூதரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், முந்தைய படங்களைவிட இப்படத்தில் கொஞ்சம் இளமையாக இருக்கிறார். இப்படத்தின் தயாரிப்பாளர் வேறு. அடுத்தவன் காதலிக்கு ரூட் விடும் கதாபாத்திரத்தில் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டார் என்று தெரியவில்லை.

கணவனை இழந்து, குழந்தையுடன் வசிக்கும் பெண்ணாக லாராதத்தா. அழகு பதுமையாய் காட்சியளிக்கும் இவர், தன்னுடைய கதாபாத்திரத்தை நிறைவாய் செய்திருக்கிறார். படத்தில் கொஞ்சம் நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார்.

இஷா ஷெர்வானி. அழகாய் ஜொலிக்கிறார். இவரது கண்களே நிறைய வார்த்தைகள் பேசுகிறது. ஆனால், இவரது கதாபாத்திரத்தை படத்தில் ஊமையாக்கிவிட்டதுதான் வருத்தத்தை அளிக்கிறது. நாசருக்கு வலுவான கதாபாத்திரம் இல்லையென்றாலும், அவருடைய பணியை நிறைவாக செய்திருக்கிறார்.

இயக்குனர் பிஜாய் நம்பியார், இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளர் என்பதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு காத்திருந்தது. ஆனால், அதை நிறைவேற்ற சற்று தடுமாறியிருக்கிறார். இரண்டு வெவ்வேறான காலகட்டங்களில் பயணிக்கும் இரண்டு கதாபாத்திரங்களையும் கிளைமாக்ஸில் இணைத்து கதைக்கு ஒரு ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார். அந்த இடத்தில் மட்டும் இயக்குனர் பளிச்சிடுகிறார். மற்றபடி, திரைக்கதையில் கோட்டை விட்டு விட்டார். ஜீவாவின் கதாபாத்திரம் மும்பையில் வாழ்வதாக இருந்தாலும், அக்காவம், தம்பியும் சேர்ந்து சிகரெட் பிடிக்கும் காட்சிகளை இயக்குனர் தவிர்த்து இருக்கலாம்.

அரை டஜன் இசையமைப்பாளர்கள் இசையமைத்திருந்தாலும், நம்ம ஊர்க்காரர் அனிருத் இசையமைத்திருக்கும் மெலோடி பாடல் மட்டும் மனதில் நிற்கிறது. ‘மரிய பிதாஜே’ என்ற பாடல், அடிதடியோடு கலந்து கேட்பதால், காதுகளில் இனிமையாக ஒலிக்கவில்லை.

படத்தோட பெரிய பலம் ரத்னவேலு, வினோத் ஆகியோரின் ஒளிப்பதிவுதான். இருவரும் இப்படத்திற்காக ரொம்பவும் உழைத்திருக்கிறார்கள். கோவாவின் அழகை, வேறொரு கோணத்தில் வித்தியாசமாக படம்பிடித்து காட்டியிருப்பது ரொம்பவும் அழகு.

மொத்தத்தில் ‘டேவிட்’ தள்ளாட்டம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top