புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



வளர்த்துவந்த நாய், திடீரென வெறிகொண்டு கடித்ததால் முகத்தில் இருந்த சதைகள் கிழிந்து
சிதறிய நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட பெண் ஒருத்திக்கு, இரத்தத்தைக் குடிக்கும் அட்டைகளை பயன்படுத்தி இரத்த ஓட்டத்தை
சீர்படுத்தி, கிழிந்த சதைப் பகுதிகளை ஒட்ட வைக்கும் அபார அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர் சுவீடன் நாட்டைச் சேர்ந்த இரண்டு மருத்துவர்கள். 


சுவீடன் நாட்டின் தென் பகுதியில் வாழ்ந்துவரும் அந்த பெண்ணை நள்ளிரவு மால்மோ எனுமிடத்தில் உள்ள ஸ்கேனே மருத்துவமனைக்கு அவருடைய உறவினர்கள் கொண்டு சென்றனர் . அந்தப் பெண் வளர்த்து வந்த நாய், அவருடைய முகத்தின் மேல் உதட்டிலிருந்து கண் வரை உள்ள சதைப் பகுதிகளை கடித்துக் குதறி எறிந்துவிட்டது. அந்தப் பெண்ணை மருத்துவமனைக்குக் கொண்டு வந்த அவருடைய உறவினர்கள், முகத்தில் இருந்து பிய்ந்து விழுந்த அந்த சதைப் பகுதிகளையும், ஒரு குளிர்பெட்டியில் வைத்துக் கொண்டு வந்தனர். அதுவே அங்கிருந்த மருத்துவர்களுக்கு பெரும் உதவியாக ஆனது.



அந்தப் பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்த மருத்துவர் ஜென்ஸ் லார்ஸன், இப்படிப்பட்ட முக அறுவை சிகிச்சையில் சிறப்பு அனுபவம் பெற்ற மருத்துவர் ஸ்டீனா கிளாஸன் என்பவரை அறுவை சிகிச்சைக்குத் துணை புரியுமாறு அழைக்க, அவரும் குறுகிய நேரத்தில் வந்து சேர்ந்துள்ளார்.



நாயால் கடித்துக் குதறப்பட்ட பகுதியில், அங்கிருந்த கிழிந்து 
 விழுந்த சதைப் பகுதிகளை ஒட்ட வேண்டுமெனில், முகத்திற்கு தொடர்ந்து இரத்தம் பாய்ச்சப்பட வேண்டும். அப்போதுதான் சதைகளை காயமுற்ற இடங்களில் ஒட்ட முடியும். இதற்காக அட்டைகளை வரவழைத்தனர். ஏனெனில், சதைகள் அறுந்த பகுதிகளில் இரத்தம் உறைந்துவிடும். எனவே, இரத்தம் முகத்திற்கு மீண்டும் பாய வேண்டுமெனில், அந்த இடத்திலுள்ள இரத்தம் உறிஞ்சப்பட்டால், புதிய இரத்தம் அந்த இடத்திற்கு பாயும். இதற்கு அட்டைகளை பயன்படுத்தினர். ஒன்று இரண்டல்ல, 358 அட்டைகளைப் பயன்படுத்தியுள்ளனர்! அட்டைகள் இரத்தத்தை உறிஞ்சுவதால், இரத்தம் குறையும் அந்தப் பகுதிக்கு இரத்தம் பாய்வது மட்டுமின்றி, அட்டைகள் சுரக்கும் ஒரு திரவம் இரத்தத்தின் திரவ நிலையை இளகுவாக்கும். இது அறுவை சிகிச்சைக்கு மிகவும் உகந்ததாகும். 


எனவே அட்டைகளை முகத்தில் வைத்து இரத்தத்தை உறையச்செய்து, அதன் மூலம் உண்டாகும் இரத்தப் பாயலை பயன்படுத்தி 15 மணி நேரத்தில் கிழந்த சதைப் பகுதிகள் அனைத்தையும் வெற்றிகரமாக பொறுத்தியுள்ளனர். ஒரு கட்டத்தில் அட்டைகள் (ஒரு முறை பயன்படுத்தியதை மீண்டும் பயன்படுத்த முடியாது) போதுமான அளவி்ற்கு இல்லாததால், இங்கிலாந்தில் இருந்து தருவித்துப் பயன்படுத்தியுள்ளனர்! இப்படிப்பட்ட அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்துவதற்காகவே, ஐரோப்பிய நாடுகளில் அட்டைகள் வளர்க்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



அறுவை சிகிச்சையின் முடிவில், அந்தப் பெண்ணின் மூக்கு, மேல் உதடு, கண்ணம் உள்ளிட்ட பகுதிகள் நன்றாக பொறுத்தப்பட்டுள்ளன. “அவரால் சிரமமின்றி மூச்சு விட, சாப்பிட, பேச முடியும்” என்று மருத்துவர் கிளாஸன் கூறியுள்ளார்.



அந்தப் பெண்ணிற்கு செய்யப்பட்ட அறுவை வெற்றி பெற்றாலும், எதிர்காலத்தில் அவர் சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் சீராக்கும் அறுவை ஒன்றை செய்துக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.



அட்டைகளைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்வது ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்றுவருவதுதான் என்றாலும், முகத்தில் இப்படிப்பட்ட ஒரு கடினமான அறுவை நடைபெற்றது இதுவே முதல் முறையாகும். 

அந்தப் பெண்ணை கடித்த - அவர் செல்லமாக வளர்த்த அந்த நாய் சுட்டுக்கொல்லப்பட்டது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top