புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



என்னதான் அழகாக மேக் அப் செய்து அலுவலகம் கிளம்பினாலும் பேருந்து நெரிசலில் சிக்கி முகம் டல்லாகிவிடுகிறதே என்ற கவலை சிலருக்கு உண்டு. நாள் முழுக்க புத்துணர்ச்சியோடு இருக்க அழகு நிபுணர்கள் தரும் ஆலோசனைகள் இதோ உங்களுக்காக.




ஐஸ்கட்டி ஒத்தடம்

அலுவலகம் கிளம்புவதற்கு முன் சில ஐஸ் கட்டிகளை காட்டன் துணியில் எடுத்துக் கொள்ளுங்கள். அதை முகத்தில் சிறிது நேரம் ஒற்றி எடுங்கள். இதனால் சருமம் புத்துணர்வு பெறும். பின் உங்கள் விருப்பப்படி பவுடர் அல்லது மேக்-அப் போட்டுக் கொண்டால் அடுத்த ஐந்து மணி நேரம் வரை முகம் அப்படியே இருக்கும்.

"குளிர்ந்த நீரில் "யூடிகோலன்" (Eaudecologne) என்ற லோஷனை கலந்து முகத்தில் தெளித்துக் கொண்டால், முகம் பளிச் என்றிருக்கும். பொதுவாக முகத்தில் சதை தளர்வாகத் தெரியும்போதுதான் வயதான தோற்றம் ஏற்படும். இந்த லோஷனை உபயோகிக்கும்போது, தளர்ந்த சதை இறுகி முகத்தில் பொலிவு கூடும்.

உடையில் கவனம் அவசியம்

உடை விஷயத்தில் அதிக கவனம் தேவை. உங்களுக்கான சரியான அளவுடன் நேர்த்தியாக உடுத்துங்கள். காலையில் மீட்டிங் இருந்தால் காட்டன் புடவை உடுத்தலாம். அதே மீட்டிங் மாலையில் இருக்கும் பட்சத்தில், காட்டன் சீக்கிரமே கசங்கி விட வாய்ப்புண்டு என்பதால் அதைத் தவிர்க்கலாம். காட்டன், சிந்தடிக் என்று எந்த உடை அணிந்தாலும், அதிகம் லூசாகவும் இல்லாமல், மற்றவர்கள் கண்களை உறுத்தும் வகையில் மிகவும் இறுக்கமாகவும் இல்லாமல், சரியாக அணிவது புத்துணர்ச்சியோடு தன்னம்பிக்கையும் ஏற்படுத்தும்.

ஃபேஷ் வாஷ் உபயோகிக்கலாம்

காலையில் போடும் மேக்-அப் மாலை வரைக்கும் தாங்காது. எனவே சிலர், மேக்-அப் லேசாகக் கலைந்தால்கூட அதன் மேலேயே மீண்டும் போட்டுக் கொள்கின்றனர். இது தவறு. ஏனெனில், ஏற்கெனவே போட்டிருக்கும் மேக்-அப் சரும துவாரங்களை அடைத்திருக்கும். அதன் மீதே மறுபடியும் பவுடர் அல்லது மேக்-அப் போடுவது உங்கள் முகத்தில் படிந்திருக்கும் வியர்வையையும் அழுக்கையும் மேலும் அதிகமாக்கும்.

அதனால் சிரமம் பார்க்காமல் நடுவில் ஒருமுறையாவது முகத்தைக் கழுவி விட்டோ, "வெட் டிஷ்யூ" பேப்பர் கொண்டு நன்றாகத் துடைத்து விட்டோ மீண்டும் மேக்-அப் போட்டுக் கொள்வதே சிறந்தது. முகம் கழுவ சோப்பைக் காட்டிலும் ஃபேஸ் வாஷ் உபயோகிப்பது நல்லது.

சரியான ஃபவுண்டேசன்

முகத்திற்கு ஃபவுண்டேஷனை தேர்ந்தெடுக்கும்போது, அவரவர் நிறத்துக்கேற்ற ஷேட்களையே தேர்ந்தெடுக்க வேண்டும். ஏ.சி அறையில் வேலை செய்பவர்கள் லோஷன் ஃபவுண்டேஷனையும், ஏ.சி இல்லாத அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் கிரீம் அல்லது கேக் ஃபவுண்டேஷனையும் உபயோகிக்கலாம்.

லைட் கலர் லிப்ஸ்டிக் உபயோகிப்பதுதான் தற்போது ஃபேஷன். புதிதாக லிப்ஸ்டிக் உபயோகிக்கத் துவங்குகிறவர்களும் லைட் கலர் லிப்ஸ்டிக் போடலாம்.லிப்ஸ்டிக் வேண்டாம் என்று நினைக்கிறவர்கள் கலர்லெஸ் லிப்ஸ்டிக், லிப் பாம் அல்லது வேஸலின் போட்டுக் கொள்ளலாம்.

ஸ்கின் டானிக்

கண்ணுக்கு ஐ லைனர் மற்றும் லைட் ஷேடில் ஐ ஷேடோ போடுவது முகத்துக்குக் கூடுதல் கவர்ச்சியைத் தரும். மஸ்காராவில் இப்போது "ஐ காஷா பென்சில்"கள் வந்துள்ளன. அவற்றை உபயோகிப்பது கண்ணுக்கு புதுப் பொலிவைத் தரும்.

ரோஜா இதழ்களைக் கொண்டு தயாரித்த சாறு முகத்திற்கு ஏற்றது. இதற்கு "ஸ்கின்டானிக்" என்று பெயர். அடிக்கடி இந்தத் தண்ணீரால் முகத்தைக் கழுவினால், முகம் பளபளப்பாக இருக்கும். கண்ணுக்குக் கீழே உள்ள கருவளையமும் மறைந்து விடும்"

எண்ணெய் வழிவதை தடுக்க

தலைக்கு எண்ணெய் வைத்தாலே சில மணித் துளிகளில் எண்ணெய் வழிய ஆரம்பித்துவிடும். அதற்காக எண்ணெய் வைக்கா விட்டாலும் கூந்தல் வறண்டுவிடும் இதை தவிர்க்க இரவு நேரங்களில் எண்ணெய் வைத்துவிட்டு காலையில் தலைக்கு குளிப்பது முகத்திற்கு புத்துணர்ச்சி தரும். இல்லாவிட்டால் பிசுபிசுப்பு தன்மை இல்லாத எண்ணெய்களை தலைக்கு உபயோகிக்கலாம். இது முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்கும்.

புத்துணர்ச்சி தரும் புன்னகை

என்னதான் மேக் அப் போட்டாலும் கடுகடு முகத்தோடு இருந்தால் அது பிரயோசனம் இல்லை. இன்முகமும், கனிவான பேச்சுமே நமக்கும் புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதோடு பிறரையும் மகிழ்வடையச் செய்யும். எனவே எப்போதும் சிரித்த முகத்துடன், கனிவான வார்த்தைகளையே பகிர்ந்து கொள்ளுங்கள். அது கூடுதல் அழகையும் புத்துணர்ச்சியையும் தரும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top