புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா ´பட்டத்து யானை´ என்ற படத்தில் விஷால் ஜோடியாக நடிக்கிறார். பூபதி பாண்டியன் இந்த படத்தை இயக்குகிறார். மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார்.


கதாநாயகியான ஐஸ்வர்யாவை, அர்ஜுன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு அறிமுகப்படுத்தி பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது....

நான் 30 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக, பத்திரிகையாளர்களை சந்தித்து உள்ளேன். இந்த சந்திப்பு புதியது.

என் மகளை கதாநாயகியாக அறிமுகப்படுத்தும் சந்திப்பு இது. எனக்கு பெருமையாக இருக்கிறது. பணம், புகழ், நண்பர்கள், சந்தோஷம் எல்லாமே இந்த சினிமாவில்தான் எனக்கு கிடைத்தது. சோறு போட்ட அந்த துறையில் என் மகளை அறிமுகப்படுத்துகிறேன்.

இதனை கேள்விப்பட்டு பலர் பாராட்டினர். இன்னும் சிலர் ஆண் என்றால் பரவாயில்லை. பெண்ணாக இருக்கிறதே? பரவாயில்லையா என்றனர். நல்லது, கெட்டது எல்லா துறையிலும் இருக்கிறது. நாம் நடந்து கொள்ளும் முறையில்தான் இருக்கிறது.

என் பெண்ணை பையன் மாதிரிதான் வளர்த்து உள்ளேன். பயம் இல்லை என்று அவர்களிடம் கூறினேன்.

சினிமா என் வீடு. நானே உள்ளே போக பயந்தால் மற்றவர்கள் எப்படி வருவார்கள். குடும்பத்துடன், மகிழ்ச்சியுடன் அறிமுகப்படுத்தி உள்ளேன். பூபதி பாண்டியன் திறமையான இயக்குனர். கதை பிடித்து இருந்தது.

விஷால் நாயகனாக நடிப்பது இன்னொரு மகிழ்ச்சி. ஏற்கனவே நான் இயக்கிய வேதம் படத்தில் விஷால் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். சுறுசுறுப்பானவர். எனது மகளுக்கும் நடிக்க பிடித்துள்ளது.

இவ்வாறு நடிகர் அர்ஜுன் கூறினார். பேட்டியின்போது நடிகர் விஷால், இயக்குனர் பூபதி பாண்டியன், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

 
Top