புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வாய்க்குள் புண்கள். சாப்பிட முடியாது அவதிப்படுகிறார்கள்.போதாக்குறைக்கு கை கால்களில் கொப்பளங்கள்.


கொப்பளிப்பான் (Chicken pox) போல மெல்லிய நீர்க் கொப்பளங்கள் அல்ல. சற்று மஞ்சள் நிறமாக ஓரளவு தடித்தவை. ஆயினும் சீழ்ப் பிடித்த கொப்பளங்களும் அல்ல.

இது என்ன நோய்?

கை கால் வாய்ப்புண் நோய் எனலாமா?

Hand Foot and Mouth Disease (HFMD) என ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.

தானாகவே மாறக் கூடிய ஒரு சாதாரண தொற்று நோய்தான். Coxsackievirus என்ற வைரசால் தொற்றுகிறது. இது போலியோ நோயை ஏற்படுத்தும் கிருமியை ஒத்தது. ஆனால் அத்தகைய பாரிய பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தவதில்லை. எனவே பயப்பட வேண்டியது இல்லை.

அறிகுறிகள்

நோயின் அறிகுறிகள் பலவாறாக வெளிப்படலாம்.

உடம்பு அலுப்பு, தொண்டைநோய், சாதாரண காய்ச்சல் ஆகியவற்றுடன் ஆரம்பிக்கும். பசியின்மையும் சேர்ந்து இருக்கலாம். வாயினுள் சிவப்பாக கொப்பளங்கள் போல ஆரம்பிக்கும். பின் உடைந்து ஏற்படும்



வாய்ப்புண்கள்தான் இந்நோயின் மிக முக்கிய அறிகுறியாகும். சாதாரண சூட்டு வாய்ப் புண்கள் (Apthous Ulcer) போலவே தோற்றமளிக்கும்.

அவற்றில் வலியும் இருக்கும். பொதுவாக காய்ச்சல் தோன்றி ஓரிரு நாட்களில் கொப்பளங்கள் தோன்றும். காய்ச்சல் கடுமையாக அடிப்பதில்லை.



இதே போன்ற கொப்பளங்களும் புண்களும் பாதங்களிலும் உள்ளங் கைகளிலும் தோன்றும்.

குண்டிப் பக்கமாகவும் தோன்றுவதுண்டு.

இவை அரிப்பை ஏற்படுத்துவதில்லை என்பது முக்கிய அம்சமாகும்.

பரவுவது எப்படி?

ஒருவரிலிருந்து மற்றவருக்கு வேகமாகத் தொற்றக் கூடியது.

மூக்கிலிருந்து சிந்தும் நீர், எச்சில் போன்றவற்றலிருந்து பரவும். நோயுள்ளவர் தும்மும் போதும் இருமும் போதும் தெறிக்கும் துளிகள் மூலமே முக்கியமாகப் பரவும்.

எனவே கை லேஞ்சியால் அல்லது ரிசூவினால் மூக்கையும் வாயையும் மூடிக் கொள்ள வேண்டியது அவசியம். இது எந்த நோய்க்கும் பொருந்தும்.

குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே இதனைப் பழக்க வேண்டும்.

கொப்பளங்களிலுள்ள நீரின் மூலமும் பரவலாம். பிள்ளைகள் அடிக்கடி வாயுக்குள் கைகளை வைப்பதால் கிருமியால் மாசடைந்த கைகளால் வேகமாகப் பரவுகிறது.

ஏச்சிலால் வாயுலிலுமுள்ள கிருமிகள் பரவுவதால் நோயுள்ள ஒருவர் உபயோகித்த பாத்திரங்களை நன்கு சுத்தம் செய்யாமல் உபயோகிகக் கூடாது. வீட்டில் ஒருவரிலிருந்து மற்றவருக்குப் பரவுவதற்கு இதுவும் முக்கிய காரணமாகும்.

நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் சுமார் ஒரு வார காலத்தில் மட்டும் பரவும் என்றில்லை. பின்னரும் பரவலாம். சிலரில் நோய் வெளிப்படையாகத் தெரியாது. ஆயினும் அவர்கள் நோய் காவிகளாக இருந்து மற்றவர்களுக்குப் பரப்புவதும் உண்டு.

ஆபத்தான பின் விளைவுகள் எதனையும் இது ஏற்படுத்தாது. ஆயினும் வாய்ப் புண்கள் கடுமையாக இருந்தால் சில பிள்ளைகள் உணவுகளை உண்ணவும், போதிய நீராகாரம் எடுக்கவும் மறுப்பார்கள். அவ்வாறான நிலையில் நீரிழப்பு ஏற்பட்டால் நாளங்கள் ஊடாக ஏற்ற (IV Fluid) நேரிடலாம்.

உணவு

இதைத் தவிர்க்க பிள்ளைகள் உண்ண விரும்பும் நீராகாரங்களைத் தாராளமாகக் கொடுங்கள். ஐஸ் வோட்டர். ஐஸ் கிறீம் போன்ற குளிர்மையான நீராகாரங்கள் இந்நேரத்தில் வாய்க்கு இதமாக இருக்கும். குளிர்ந்த பாலும் நல்லது.

ஆயினும் வாய்ப் புண்களை உறுத்தக் கூடிய புளிப்புத்தன்மையுள்ள பழச்சாறுகளையும் ஏனைய நீராகாரங்களையும் தவிருங்கள்.

அதேபோல அதிக காரம் மற்றும் உப்பு சேர்ந்த உணவுகளும் புண்களை வேதனைப்படுத்தும்.



மென்மையான அதிகமாக மெல்லத் தேவையற்ற உணவுகளை குழந்தைகள் அந்நேரத்தில் விரும்பி உண்பர்.

உண்ட பின் நகச்சுட்டு நீரில் வாய் கொப்பளிப்பது நல்லது.

மருந்துகள்

மருந்துகள் எதுவும் தேவைப்படாது. காய்ச்சல், உடல் வலி ஆகியவற்றிற்கு பரசிட்டமோல் போதுமானது.

மருத்துவரின் ஆலோசனையுடன் வலியைத் தணிக்கும் இதந்தரும் ஓயின்மென்ட் பூசுவது வாய்ப்புண்களுக்கும் ஏனைய புண்களுக்கும் உதவும்.

அன்ரிபயடிக் எதுவும் தேவைப்படாது.

ஓரு வாரமளவில் தானாகவே குணமாவிடும்.

தடுப்பது எப்படி

சுத்தத்ததையும் சுகாதாரத்தையும் பேணுவதே அடிப்படை உத்தியாகும். முக்கியமாக மலம் கழித்தபின் சோப் போட்டுக் கைகளைச் சுத்தம் செய்வது அவசியம்.

என்னிடம் வந்த ஒரு தாயார் இந்நோயுடன் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார்.
குழந்தைகள் மலம் கழித்தால் கழுவுவது இவர்தான். ஆனால் அதன் பின் வெறுமனே கைகளை கழுவுவார்.
சோப் போட்டுக கழுவுவது முக்கியம் என்பதை வலியுறுத்திக் கூறினேன்.

வயிற்றோட்டம், நெருப்புக் காய்ச்சல்(டைபோயிட்), செங்கண்மாரி, பன்றிக் காய்ச்சல் H1N1   போன்ற பல நோய்களும் அவ்வாறுதான் பரவுகிறது என்பதையும் புரிய வைக்க வேண்டியிருந்தது.

வாய்க்குள் கை வைப்பது, நகங் கடிப்பது போன்ற பழக்கங்களாலும் அத்தகைய நோய்கள் பரவும் என்பதைச் சொல்ல வேண்டுமா?

குழந்தைகளுக்கு இவை பற்றிய அறிவை வளர்ப்பதில் ஆசிரியர்களது பங்களிப்பு அவசியமானது.

பெற்றோரின் முன் உதாரணமும் அறிவுறுத்தல்களும் அதைவிட மிக முக்கியமாகும்.

நோயுற்ற பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பக் கூடாது. இல்லையேல் பாடசாலைப் பிள்ளைகளிடையே இப்பொழுது பரவுவது போல வேகமாகப் பரவுவதைத் தடுக்க முடியாது.





 
Top