புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

குந்தி பணிவுடன் அமர்ந்தாள். அவளுக்கு கிடைத்தற்கரிய மந்திரம் ஒன்றை கற்றுக் கொடுத்தார் துர்வாசர். சாதாரண மந்திரமா அது? மகளே! தேவர்கள் யாராக இருந்தாலும், இந்த மந்திரத்தைக் கேட்ட மாத்திரத்தில் ஓடோடி வருவார்கள். அவர்களால் நீ கர்ப்பமடைவாய்.
தெய்வ மைந்தர்களைப் பெறுவாய். அவர்களது புகழ் இந்த உலகம் உள்ள வரை நிலைத்திருக்கும். நீயும் தெய்வத்தாய் என்ற அந்தஸ்தைப் பெறுவாய், என்றார். குந்தி அப்போது தான் வயதுக்கு வந்திருந்தாள். தழதழவென்ற உருவம். அவளைப் பார்க்கும் ஆண்களின் கண்கள் பார்வையை விலக்கவே விலக்காது. அவளைத் திருமணம் செய்ய பல நாட்டு மன்னர்களும் துடித்துக் கொண்டிருந்தனர். வயதுக்கு வந்திருந்தாலும், விளையாட்டு புத்தி அந்தப் பெண்ணுக்கு இன்னும் மாறவில்லை. அது மட்டுமல்ல! மனித இனத்திடம் ஒரு பழக்கம் உண்டு. எதைச் செய்யக்கூடாது எனச் சொல்கிறோமோ அதை செய்து பார்த்தால் என்னவென்று? காலையில் பள்ளிக்கு புறப்படும் பையனிடம் தாய், டேய்! டிபன் பாக்சிலே இன்று உனக்கு பிடித்த ஸ்நாக்ஸ் வச்சிருக்கேன். இங்கேயே திறந்து பார்க்காதே. ஸ்கூலில் போய் பார், என்பாள். பையன் பாதி வழி தான் போயிருப்பான். உடனே டிபன் பாக்சை திறந்து என்ன இருக்கிறது என பார்த்து விடுவான். குறிப்பாக குழந்தைகளிடம் இந்தக் குணம் அதிகமாகவே உண்டு. டிவியில் இன்ன நிகழ்ச்சியைப் பார்க்காதே என்றால், பெற்றவர்கள் அசரும் சமயத்தில், குழந்தை அந்த சானலைக் கண்டிப்பாக திருப்பிப் பார்ப்பான்.

குந்தியும் குழந்தை தானே! அவளுக்கும் ஆசை. இந்த முனிவர் ஏதோ வரம், குழந்தை என்றெல்லாம் சொன்னாரே! சூரியனையும். சந்திரனையும், புதனையும், சுக்கிரனையும், இந்திரனையும், வசுதேவர்களையும் யாரை அழைத்தாலும் வருவார் என்று சொன்னாரே! இன்று யாரையாவது பார்த்தால் என்ன? அப்படியெல்லாம் வரவா செய்வார்கள்! இவர் ஏதோ கதை சொல்லியிருக்கிறார், என்றவளாய், வானத்தை அண்ணாந்து பார்த்தாள்.
கண் கூசியது. உயரத்தில் சூரியன் சென்று கொண்டிருந்தான். இந்த சூரியனை அழைத்தால் என்ன! வருகிறானா என்று தான் பார்ப்போமே, என்றவளாய், சூரியனுக்குரிய மந்திரத்தை உபதேசித்தாள். அடுத்த கணமே தேஜஸான முகத்துடன் கொவ்வைப்பழமெனச் சிவந்த நிறத்தில் வந்து நின்றான் ஒரு இளைஞன். அவனைப் பார்த்ததும் குந்திக்கு நாணம். தலை குனிந்து நின்றாள். அவன் அவளது அருகில் வந்தான். அவளை ஏதும் கேட்கவில்லை. முகத்தை தன் ஒற்றை விரலால் தூக்கி அவளது கண்களின் அழகை ரசித்தான். அவள் சுதாரித்து ஒதுங்கினாள். இளைஞரே! திடீரென இங்கு வந்த தாங்கள் யார்? என் அனுமதியின்றி எப்படி என்னைத் தொடலாம்? பெண்கள் கற்புநெறியுள்ளவர்கள் என்பதைத் தாங்கள் அறிய மாட்டீர்களோ? என்றாள் சிறு கோபத்துடன். அவன் கலகலவென சிரித்தான். அன்பே! நன்றாக இருக்கிறது உன் கூற்று. நீ தானே என்னை அழைத்தாய். அதிலும் உணர்வு களைத் தூண்டும் அந்த மந்திரத்தைச் சொல்லி என்னை வரவழைத்து விட்டு, இப்போது ஒதுங்கிப் போனால் நான் என்ன செய்ய முடியும்? தாபத்தால் தவித்து இங்கு வந்தேன் கண்ணே! என்று சொல்லியபடியே, அவளது பதிலுக்கு காத்திராமல், ஆசையுடன் அணைத்தான். அவள் அவனது பிடியில் இருந்து விலகினாள்.

சூரிய பகவானே! இதென்ன தகாத செயல். முனிவர் சொன்னாரே என்பதற்காக ஏதோ விளையாட்டாக மந்திரத்தைச் சொன்னேன். அதை நிஜமென நம்பிக் கொண்டு, நீர் இப்படி அடாத செயலைச் செய்வது தேவர் குலத்துக்கு இழுக்கை விளைவிக்கும். போய் விடும், என்று சப்தமாகச் சொன்னாள் குந்தி. சூரியன் அவளை விடவில்லை. மீண்டும் அவளை அணைத்தான். அழகுப்பதுமையே! இம்மந்திரத்தைச் சொன்னவர் மந்திரத்திற்குரிய பலனை அடைந்தே தீர வேண்டும். அப்படி மறுத்தால் மந்திரத்தை உனக்கு யார் கற்றுத் தந்தார்களோ அவருக்கு சாபமிடுவேன். மேலும் மந்திரத்தை சொன்னவரின் குடும்பமும் நாசமாகி விடும். என்ன சொல்கிறாய்? என்றான். குந்தி அவனை கையெடுத்து வணங்கினாள். பகலவனே! என்னை மன்னித்து விடும். அறியாமல் செய்யும் தவறுக்கு இவ்வுலகில் மன்னிப்பு இல்லையென்றால், உலகத்தில் மனிதாபிமானம் செத்துப் போகும். நான் கன்னிப்பெண். உம்மால் நான் கர்ப்பமானால், இந்த உலகம் என்னைப் பழிக்கும். ஒளி மிகுந்த உம்மால் என் எதிர்காலம் இருண்டு போகும். என்னை மன்னித்து விட்டுவிடும், என்று காலில் விழுந்தாள் குந்தி. சூரியன் அவளிடம், பெண்ணே! கலங்காதே. தேவர்களின் உறவால் ஒரு பெண் களங்கப்படமாட்டாள். அவளது கற்புநெறி பாதிக்கப்படாது. குழந்தையைப் பெற்ற பிறகும் நீ கன்னியாகவே இருப்பாய். உன் அழகும் இரட்டிப்பாகும். சஞ்சலத்தை அகற்றி மனதை ஒருமைப்படுத்தி என்னோடு இன்பமாக சேர். உலகம் போற்றும் உத்தமன் ஒருவன் உன் வயிற்றில் பிறப்பான். அவனை உலகமே போற்றி வணங்கும், என்றான். குந்தி ஒருவாறு இதை ஏற்றுக் கொண்டாள். சூரியனின் ஆசைக்குப் பணிந்தாள். மலர்கள் தூவிய பஞ்சுமெத்தை படுக்கையை அங்கே வரவழைத்தான் சூரியன். அவளோடு இன்பமாக இருந்த பிறகு அவன் மறைந்தும் விட்டான். அந்த நேரமே அவளது வயிற்றில் கரு உற்பத்தியானது. வீட்டுக்குச் செல்லவில்லை அவள். நதிக்கரை ஒன்றில் இருந்த அரண்மனையில் இருந்த அவள் யாரையும் பார்ப்பதைத் தவிர்த்தாள். சில நாட்களிலேயே கரு முதிர்ந்து விட்டது. குந்தியின் வயிற்றில் இருந்து அழகு குழந்தை ஒன்று வந்தது. குந்தி ஆசையோடு தன் மகனை முத்தமிட்டாள். என்ன ஆச்சரியம்! குழந்தையின் காதுகளில் குண்டலம் ஒளிர்ந்தது. மார்பில் அழகான தங்கக்கவசம் இருந்தது. சூரிய மைந்தனல்லவா! பிறக்கும் போதே வீரச் சின்னங்களுடன் பிறந்திருக்கிறான்!

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top