புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

வீட்டு பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவுக்கு சென்று அங்கு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கும் தமது மகளை மீட்டுத் தருமாறுகோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஏறாவூர் நகர முதல்வருமான
அலிஸாஹிர் மௌலானாவிடம் முறையிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு, வாகரை ஐம்பது வீட்டுத் திட்டக் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த தேவராசா பானுமதி என்ற பெண்ணே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பெண்ணின் பெற்றோர் ஏறாவூர் நகர முதல்வரிடம் நேற்று முறையிட்டுள்ளனர்.

அம்முறைப்பாட்டில்,

சென்ற வருடம் ஒக்டோபர் மாதம் வாகரையிலிருந்து வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக சவூதி நோக்கிப் புறப்பட்ட தமது மகள் அடி, உதை, கொதிநீரை உடம்பில் ஊற்றுதல் உட்பட்ட பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்பட்டுள்ளார். அத்துடன் அவர் பணிபுரிந்த காலத்தில் எதுவிதமான ஊதியமும் வழங்கப்படவில்லை.

கடைசியாக இவ்வருடம் பெப்ரவரி மாதம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தான் கொதி நீரால் சித்திரவதைக்கு உட்பட்டுள்ளதாகவும் தன்னை எப்படியாவது இந்த வீட்டின் சித்திரவதைகளிலிருந்து காப்பாற்றுமாறும் கூறினார்.

அதன் பின்னர் அவருடனான தொடர்புகளும் அற்றுப் போய்விட்டன. இந்த விடயம் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறையிட்டும் இதுவரை அவர்கள் நம்பிக்கை தரக்கூடிய பதில் எதுவும் தரவில்லை' என்று தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் சவூதி அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்வதாக ஏறாவூர் நகர முதல்வர் அலிஸாஹிர் மௌலானா இதன்போது குறித்த பெற்றோருக்கு உறுதியளித்துள்ளார்.


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top