புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இயக்குனர் மணிவண்ணனுக்கு வந்த மாரடைப்புக்கு காரணமே, இரு தினங்களுக்கு முன்பு விகடனில் வெளியான பாரதிராஜாவின் அவதூறுப் பேட்டிதான்.

அவரது கொடூரமான வார்த்தைகளே மணிவண்ணனைக் கொன்றுவிட்டன என்று திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

பாரதிராஜாவிடமிருந்து வந்து மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்ற இயக்குனர்கள் இருவர்தான். ஒருவர் கே பாக்யராஜ். மற்றவர் மணிவண்ணன்.

இதை பலமுறை பாரதிராஜாவே கூறியுள்ளார். மணிவண்ணன் மிகவும் சுறுசுறுப்பானவர். அவர் வேகத்துக்கு படப்பிடிப்பில் யாராலும் ஈடு கொடுக்க முடியாது.

அதே நேரம் மிக இளகிய மனம் படைத்தவர். தன்னிடம் பழகிய அனைவரிடமுமே வெளிப்படையாக நடந்து கொள்பவர்.

எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் கொண்டவராக இருந்தாலும், தான் பெரிதும் மதிப்பவர்கள் தன்னை அவதூறாகப் பேசினால் அதை பொறுத்துக் கொள்ள முடியாதவராக இருந்தார்.

ஆயிரம் கருத்து பேதங்கள் இருந்தாலும், தான் மதிக்கும் ஒருவரை எப்போதும் மரியைதைக் குறைவாக அழைத்ததில்லை மணிவண்ணன்.

ஈழப் பிரச்சினையில் திமுக தலைவர் கருணாநிதியை தீவிரமாக விமர்சித்தாலும், அவரை எப்போதும் தலைவர் கலைஞர் என்றே குறிப்பிட்டு வந்தார்.

இயக்குனர் பாரதிராஜா மீதும் மணிவண்ணனுக்கு வருத்தங்கள் உண்டு. அவர் தன்னை நடத்திய விதம், அவரது அரசியல் நிலைப்பாடுகள் குறித்து மணிவண்ணன் எள்ளலுடன் பேசினாலும், 'பாரதிராஜா என் தகப்பனைப் போன்றவர். அவரில்லா விட்டால் இன்று திரையுலகில் நான் இல்லை.

என்னை இரண்டாம் முறை ஈன்றவர். அவருக்கு என் மீது அன்பிருக்கிறதோ இல்லையோ... எனக்கு எப்போதும் உண்டு. நான் ஏதாவது தவறாகப் பேசியிருந்தால்கூட மன்னிச்சிடுங்கப்பா," என்று வெளிப்படையாகப் பேசியவர் மணிவண்ணன்.

ஆனால் பாரதிராஜாவுக்கோ அந்த பெருந்தன்மை துளியும் இல்லை. தன்னைவிட 12 வயது இளையவரான மணிவண்ணன் பற்றி பாரதிராஜா சமீபத்தில் ஆனந்த விகடனில் எழுதியிருந்ததைப் படித்த அத்தனைப் பேருமே முகம் சுளித்ததோடு, பாரதிராஜாவை சரமாரியாகத் திட்டித் தீர்த்தனர்.

அத்தனை கேவலமான எழுத்து. இதைப் படித்த மணிவண்ணன் எந்த எதிர்வினையும் காட்டவில்லை. அவரிடம் பலரும் கருத்துக் கேட்க முயன்றனர். கடந்த இரு தினங்களாக இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது அவரது அலைபேசி.

ஆனால் அவர் யாருக்கும் பதிலோ விளக்கமோ சொல்லவில்லை. ஏற்கெனவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவரை இந்த மனஅழுத்தமே கொன்றுவிட்டது என்பதுதான் பேச்சாக உள்ளது.

பாரதிராஜா விகடனில் மணிவண்ணன் குறித்து வெளியிட்ட செய்தி விபரம்:

"மணிவண்ணனுக்குக் கல்யாணம் நடந்த கதை தெரியுமா? என் அம்மாவுக்குத் தெரிஞ்ச ஒரு பெண், மயிலாப்பூர்ல என் நண்பர் ஆறுமுகத்தின் வீட்டில் அவருடைய பாதுகாப்பில், என் கண்காணிப்பில் இருந்துச்சு.

அந்தப் பெண்ணுக்கு நானும் ஆறுமுகமும் அவருடைய பிராமண சமூகத்தில் மாப்பிள்ளை தேடிட்டு இருந்தோம்.

ஒரு முறை மணிவண்ணனையும் அழைச்சுட்டு அந்த மயிலாப்பூர் வீட்டுக்குப் போயிட்டு கார்ல திரும்பிட்டு இருந்தோம்.

அப்போ அந்தப் பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் விஷயமாப் பேசிட்டே வந்தோம். அப்போ எங்க பேச்சுக்கு இடையில் குறுக்கிட்ட மணிவண்ணன், 'அந்தப் பெண்ணை நானே கல்யாணம் பண்ணிக்கிறேனே'னு சட்டுனு கேட்டுட்டான்.

அப்போதைக்கு நான் எதுவும் சொல்லாம, என் மனைவிகிட்ட இது சம்பந்தமா பேசினேன். 'ஒரு வருஷம் போகட்டுங்க. அப்பவும் அவர் இதே பிடிவாதத்தோட இருந்தா... அவருக்கே அந்தப் பெண்ணைக் கட்டிவெச்சுடலாம்'னு அவங்க சொன்னாங்க.

ஒரு வருஷம் போனது. 'மணிவண்ணன் அந்தப் பொண்ணு ஞாபகமாவே இருக்கான். பேசாம கட்டி வெச்சிடுங்க'னு சித்ரா லட்சுமணன் என்கிட்ட வந்து சொன்னான்.

'சரி'னு முடிவெடுத்து, அந்தப் பொண் ணுக்கு என் கைக்காசுல இருந்து பத்து பவுன் நகை போட்டு, அந்தப் பெண்ணுக்கும் மணிவண்ணனுக்கும் கல்யாணம் பண்ணிவெச்சேன்.

அப்புறம் 'காதல் ஓவியம்' படத்தின் வசனத்தை அவனை எழுதச் சொன்னேன். அந்தப் படத்தின் டப்பிங் வேலை நடந்துட்டு இருக்கும்போது அதுல கலந்துக்காம, என்னைத் தேடி வீட்டுக்கு வந்தான் மணிவண்ணன்.

'நான் தனியாப் படம் டைரக்ஷன் பண்ணப்போறேன்'னு சொன்னான். உடனே, மனசார ஆசீர்வாதம் பண்ணி அனுப்பிவெச்சேன். மணிவண்ணன் நல்ல படிப்பாளி, சிறந்த அறிவாளி.

என்ன ஒண்ணு... வாயைத் திறந்தா, எல்லாமே பொய் பொய்யாத்தான் கொட்டும். ஒரு ராஜா கதை இருக்குமே... வீதில கஷ்டப் பட்டுட்டு இருந்த ஒரு பிச்சைக்காரனை அரண்மனைல தங்கவெச்சான் அந்த ராஜா.

ஆனா, அரண்மனையின் நளபாகவிருந்து அந்தப் பிச்சைக்காரனுக்கு அலர்ஜி ஆகிடுச்சு. 'இவன் பிச்சை எடுத்த தெருவுல இருக்குற பத்து வீடுகள்ல இருந்து சோறு வாங்கிட்டு வந்து இவனுக்குப் போடுங்க'னு சொன்னார் ராஜா.

அப்படியே செஞ்சாங்க... பிச்சைக்காரனுக்கு உடம்பு சரியாப்போச்சு. அப்பிடி, மணிவண்ணனை அரண்மனைக்கு அழைச்சுட்டு வந்தது என் தப்புதான்!'' -இப்படிக் கூறியுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top