புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கொங்கோ நாட்டில் புதியவகைக் குரங்கினமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் ‘லெசூலா’ என அழைக்கப்படும் இக்குரங்கினத்தின் விஞ்ஞான ரீதியான பெயர் ‘சேர்கோபிதகஸ்
லொமாமியன்சிஸ்’  (cercopithecus lomamiensis) என்பதாகும்.

இவ் இனத்தைச் சேர்ந்த குரங்கொன்று கடந்த 2007 ஆம் ஆண்டு ஆய்வாளர்களின் கண்ணில் பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து கொங்கோவின் காட்டுப்பகுதிகளில் கடந்த 5 வருடங்களாகத் தேடி, மரபணுவியல் மற்றும் உயிரியல் ஆராய்ச்சிகளை நடத்தி இக்குரங்கினமானது , விஞ்ஞான உலகுக்கு புதியது என்பதனை உறுதிசெய்துள்ளனர்.


கொங்கோவின் மையப்பகுதியில் உள்ள மழைக்காடுகளில் இக்குரங்கினமானது அதிகமாக வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இக்குரங்குகள் இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதாகவும் இதனால் இவ்வினம் வேகமாக அழியக்கூடிய சாத்தியங்கள் நிலவுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

‘லெசூலா’ குரங்குகளானவை ‘சேர்கோபிதகஸ் ஹம்லைனி’ (Cercopithecus hamlyni) என்றழைக்கப்படும் ஆந்தை முகக் குரங்குகளின் முகத்தோற்றத்தினை ஒத்ததாகக் காணப்படுகின்ற போதிலும் இவை அவற்றிலிருந்து வேறுபட்டதென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆபிரிக்காவில் கடந்த 28 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட 2 ஆவது புதிய குரங்கினம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

 
Top