புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

வட இங்கிலாந்தில் உள்ள சவுத் லேக்ஸ் வனவிலங்கு காப்பகத்தில் அழியும் நிலையில் உள்ள சைபீரியா மற்றும் சுபத்ரா பகுதியை சேர்ந்த புலிகள் இயற்கை சூழலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.


இந்த காப்பகத்தில் புலிகளுக்கு இறைச்சி போடுவது, பராமரிப்பது போன்ற பணிகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றிரவு, இங்கு பணியாற்றும் சாரா மெக்லே (24) என்ற பெண் ஒரு புலிக்கு இறைச்சி போட்டுக் கொண்டிருந்தார்.

சற்றும் எதிர்பாராத வேளையில் அவர் மீது பாய்ந்த புலி, அந்த பெண்ணின் தொண்டையை கவ்வியது. கவ்விய வேகத்தில் அவரை இழுத்துக் கொண்டு வனப்பகுதியை நோக்கி விரைந்த புலியை காப்பக ஊழியர்கள் கூச்சலிட்டபடியே பின் தொடர்ந்து விரட்டினார்கள்.

பயந்து போன புலி அந்த பெண்ணை கீழே போட்டு விட்டு தப்பியோடியது. தொண்டை மற்றும் தலை பகுதிகளில் படுகாயமடைந்த அந்த பெண் ராயல் பிரெஸ்டன் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவத்தையடுத்து, வன விலங்கு காப்பகத்தை சுற்றிப் பார்க்க வந்த பார்வையாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

தற்காலிகமாக காப்பகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பெண்ணுடன் நீண்ட காலமாக பூனை போல பழகி வந்த புலி அவர் மீது பாய்ந்து கொல்ல முயன்றது குறித்து வனவிலங்கு உளவியலாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்துக்கு காரணமான புலியை மயக்க குண்டால் சுட்டு பிடித்த அதிகாரிகள் அதை தனிமைப்படுத்தி கூண்டில் அடைத்து வைத்துள்ளனர்.

ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சாரா மெக்லே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
 
Top